அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு ஓர் மடல்

acju jammiathulAM.பர்ஸாத்,

C 13/4, தக்வா வீதி,

புதிய காத்தான்குடி-03.

31.08.2015

தலைவர்/ செயலாளர்,

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா,

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டும் பாராளுமன்றம் செல்லவுள்ள முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிகளைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வொன்றினை தங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றமை தொடர்பில் பொது மக்களாகிய நாம் ஒரு சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இம்மடலினை எழுதுகின்றோம்.

எமது சமூகம் சார் பிரதிநிதிகள் நாடாளுமன்றிக்கு தேர்வு செய்யப்பட்டமையை பாராட்டி கௌரவித்தல் என்பது உண்மையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமெனினும், இந்நாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவ நிறுவனம் என்ற ரீதியிலும் மக்களுக்கு வகை கூறும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையிலும் அ.இ. ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு பாராட்டு விழாவிற்கு முந்தியதான சில கடமைப்பாடுகள் இருப்பது தொடர்பில் நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக அங்கு செல்லவுள்ள 21 உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் இதற்கு முன்பாகவும் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தவர்களேயாகும். இவர்கள் கடந்த காலங்களில் மக்களின் ஆணையைப்பெற்று, பதவிக் கதிரைகளுக்குச்சென்ற பின்னர் எமது சமூகத்தின் உரிமைகள், இருப்பு தொடர்பில் எவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டார்கள் என்பதும் எமக்காக இவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு தடவையேனும் வாய்திறந்து குரல் கொடுக்கவில்லை என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.

ஆனால் இவர்கள் அதற்காக வருந்தியதாகவோ மக்களிடம் மன்னிப்புக் கோரியதாகவோ தெரியவில்லை. அத்துடன் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ளவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கவோ இது வரை முயற்சித்ததாகவும் தெரியவில்லை.

எனவே, நீங்கள் அவர்களை அழைத்து கௌரவித்து பாராட்டுதற்கு முன்பாக செய்ய வேண்டிய பொறுப்பு மிக்க பணி ஒன்று உங்களுக்கு இருப்பதாக நாம் கருதுகின்றோம். அதுதான் அவர்களின் கடந்தகால தவறுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டி. அவர்களின் பிழைகளைக் கண்டித்து அவர்களை எதிர்வரும் பாராளுமன்றத்திலேனும் பொறுப்புடன் செயற்பட வழிகாட்ட வேண்டியது ஆகும்.

காரணம், இத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மலர்ந்திருக்கின்ற இந்த நல்லாட்சி அரசிலாவது. இவர்கள் எமது சமூகத்தின் அபிலாசைகள். தேவைப்பாடுகள் அடிப்படை உரிமைப்பிரச்சனைகள் தொடர்பில் அரசுடன் பேரம் பேசல்களில் ஈடுபடாது. மீண்டும் தமக்கான அமைச்சுப் பதவிகள் அதிகாரங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்களிலும் திறை மறைவுப் பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. தமிழ் சமூகம் சார் அரசியல் தலைமைகள் ஜனாதிபதியினை சம்பூருக்கே அழைத்து மீட்டெடுக்கப்பட்ட காணிப்பத்திரங்களை அவரின் கையினாலேயே பொது மக்களுக்கு வழங்கி வைக்கின்ற அளவிற்கு. ஜனாதிபதியுடனான பேரம் பேசல்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்ற பொழுது. எமது அரசியல் தலைமைகளின் சுயநலமாக போக்கு பெரும் ஏமாற்றத்தையே எமக்குத் தருகின்றது.

அத்தோடு மட்டுமல்லாது. பாராளுமன்றத்திற்கான பதவிகள் வழங்கப்பட்ட மறு நிமிடமே எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் மேற்கொள்கின்ற மற்றுமொரு சுயநலமான விடயம்தான். தனது அதிகாரத்தின் கீழ் வருகின்ற அனைத்து பதவிகளையும். தொழில் வாய்ப்புகளையும் தனக்கு மிக வேண்டப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தகுதி தராதரமின்றி பங்கீடு செய்வதாகும். கடந்த காலங்களில் இச்செயற்பாடானது. எமது சமூகம் குறித்த மோசமான ஒரு மதிப்பீட்டினை மாற்று மத சகோதரர்களின் மத்தியில் ஏற்படுத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக காணப்பட்டு வந்தது.

எனவே தகுதியும் தரமும் இருக்கின்ற நபர்களுக்கு இவ்வாறான பதவிகளையும் பொறுப்புகளையும் பொது நோக்கோடு இன மத பேதமின்றி வழங்குகின்ற வஃதாவினை நீங்கள் இவர்களிடமிருந்து பெற்றெடுக்க வேண்டும்.

இம்முறை பொதுத்தேர்தலானது. மிக குறைந்தளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்ட தேர்தலாக மாறி. அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஆயினும் எமது முஸ்லிம் பிரதேசங்களிலேயே உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்ற அளவிற்கு. தேர்தல் வன்முறைகள் பதிவு செய்யப்பட்டு எமது சமூகத்தின் மரியாதை கேள்விக்குட்படுத்தப்பட்டது.

குறிப்பாக காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தலுக்குப் பிந்தியதான வன்முறைச் சம்பவங்கள். பள்ளிவாயிலில் வணக்கங்களில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் போன்றன பிற மத சகோதரர்களின் கண்டனங்களுக்கும் உட்படுகின்ற அளவிற்கு நிலமையை மோசமாக்கிச் சென்றது.

எனவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு தூபமிட்ட அரசியல் வாதிகளும்கூட உங்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தர இருக்கின்றனர். எனவே இப்படியானவர்களின் பிழையான அரசியல் கலாச்சாரத்தினை மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டிய சமூகப்பொறுப்பு வாய்ந்த நிறுவனமான நீங்கள். இவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவதென்பது. இவ்வாறான காடைத்தன அரசியலை ஊக்குவிப்பதற்கு சமமானதாகும்.

எனவே இவ்வாறான அரசியல் தலைமைகளை வெறுமனே அழைத்து. அவர்களின் குறைகளையும் தவறுகளையும் மறைத்துக் கொண்டு அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற முகஸ்துதி அரசியல் என்பது அள்ளாஹ்வின் பார்வையில் மிக பாவமான ஒன்றாகும்.

இவ்வாறு ஐந்து வருடங்களுக்கொரு முறை எமது சமூகத்தலைமைகளை அழைத்து. பாராட்டுவதற்குப்பதிலாக இந்த ஐந்து வருடங்களுக்கும் இவர்களை சரியாக வழி நடாத்துகின்ற இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற. பிழைகளை கண்டிக்கின்ற பாரிய பொறுப்பு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு இருக்கின்றது.

எதிர்காலத்தில் அவ்வாறான வழிகாட்டல்களைப் பின்பற்றி மார்க்க விழுமியங்களையும் வறையறைகளையும் பேணி சமூக நல அரசியலை மேற்கொள்கின்ற தலைமைத்துவங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி. அவர்களை மக்கள் மன்றங்களில் நீங்கள் பாராட்டி கௌரவிப்பீர்களாக இருந்தால். நிச்சயமாக அதுதான் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கைமாறு செய்வதாகவும். அள்ளாஹ்விடத்தில் ஏற்றம் மிக்கதாகவும் அமைய முடியும்.

எனவே, இதன் பின்னராவது ஐந்து வருடங்களுக்கொரு முறை இவர்களை பத்தோடு பதினோராவது அமைப்பாக இருந்து. பாராட்டி கௌரவிப்பதை விடுத்து குறைந்தது மூன்று மாதங்களுக்கொரு முறையேனும் எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை அழைத்து. அவர்களின் செயற்பாடுகளை மீள்வாசிப்பிற்குட்படுத்தி. அவர்களின் எதிர்கால திட்டங்கள் மீதான விவாதங்களை ஏற்பாடு செய்து. அவர்களை முறையாக வழி நடாத்த தாங்கள் முன்வர வேண்டுமென வினயமாக நாம் வேண்டிக்கொள்கிறோம்.

அதுதான் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உண்மையிலேயே ஒரு தலைமைத்துவ நிறுவனமாக இருந்து தாங்கள் ஆற்ற வேண்டிய மிகப்பாரிய பணி என்பதினை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். அள்ளாஹ் எம் அனைவரின் பணிகளையும் சீர்படுத்தித்தருவானாக.

நன்றி

இவ்வண்ணம்,

AM.பர்ஸாத்

பிரதிகள்

1. தலைமைத்துவசபை, தேசிய சூறாசபை
2. முஸ்லிம் கவுன்சில்

Published by

4 responses to “அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு ஓர் மடல்”

  1. சொல்லி வேல இல்ல. றஹ்….. அல்…கை இப்படி எல்லாம் யோசிக்குமா? போங்க பாஸ் சும்மா பம்மாத்து காட்டாம..

  2. Brother Farsath, are you PMGG member? if you want tell advice to ACJU you have to write the letter commonly,im also kattankudy I didn’t vote Mr.Hisbullah ,but don’t write letter indicate one politicians same like PMGG. It’s not nice brother.

    1. Insah Allah, PMGG/NFGG if continually against to Hisbuulah next election I will vote to Hisbullah,
      Now kattankudy peoples also feeling PMGG politics one man Show (Only Rahman concept)
      Election gone, we have to think how to work together with community.

  3. Mohammed Fasleen Avatar

    ஹலோ நாங்க நல்லாட்சிக் காரங்க என்கிட்ட பின்வரும் 10 பண்புகள் இருக்குங்க அதுதான் எங்க கொள்கை வேண்டுமானால் நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க. இதை செயற்படுத்த நாங்க எவ்வளவு பாடு படுகிறோம் தெரியுமா ஊரில் இருக்கும் ஆருமே எங்களை கண்டு கொள்ள மாட்டங்கிறாங்க நாங்களும் கிட்ட தட்ட பல மில்லியன் வரைக்கும் செலவு கூட செய்தும் பிரயோசன மில்லாம போச்சு பின்னவரும் நீங்கள் எங்களிடம் அவதானிக்கக் கூடிய பின்வரும் கொள்கைகளை நடைமுறை படுத்தினால் ……ஊரு எப்படி இருக்கும் தெரியுமா?

    தன் ஊரின் அல்லது ஒரு சகோதரரின் மானத்தை கப்பல் ஏற்ற தலை நகருக்கு அல்லது எங்கு வேண்டுமானாலும் கூட போக வேண்டும்.(இந்த கடிதம் எழுதியவர் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு கடிதம் மூலம் சென்று இருக்கிறார்) ஆகவே இவரு ஒரு நல்லாச்சிக்காரரகத் தான் இருக்க வேண்டும்

    இஸ்லாத்திக்கு சற்றும் பொருத்தமில்லாத தகுதி தராதரம் பார்த்துத்தான் மற்றவர்களுடன் பேச வேண்டும்

    படிக்காத பாமர மக்களை புறக்கணிக்க வேண்டும்

    எழை மக்களை ஏலக்சன் ஒன்று வரும் வரை ஏறிட்டும் பார்க்க கூடாது

    யாருடைய முகத்தையும் பார்த்து சிரிக்கக் கூடாது

    மூச்சுக்கு 300 தடவை நல்லாட்சி நல்லாட்சி என்று சொல்லி மக்களை மடையர்களாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்

    அரசாங்கத்தின் மூலமும் ஏனைய அமைப்புக்களின் மூலமும் ஊர் அடையும் நன்மைகளை தடுத்து நிறுத்த வேண்டும்

    குற்றங்கள் நிருபிக்கப் படாத ஒருவரை குற்றவாளி குற்றவாளி என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் கவுரவத்தையும் டேமேஜ் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்

    ஒருவருடைய அந்தஸ்தில் உயர்வு ஏற்பட்டால் உடனடியாக ஆர்ப்பாட்டம் போலிஸில் பொய் முறைப்பாடு என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்

    தங்களை தாங்கள் அதிகமாக புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்

    ஊரில் படித்தவன் பாமரன் என்ற பாகுபாட்டை உருவாக வேண்டும்

    இப்படியான எங்களுடைய நல்லாட்சி? விழுமியங்கள் அமுல் படுத்தப் பட்டால்தான் ஊரு ………………………………..

Leave a comment