கொழும்பு: அளுத்கமையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், சோபித தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் சோபித தேரரை கோட்டை விகாரையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமை யில் சந்தித்த பிரதிநிதிகள் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் எதிர்காலத்தில் அளுத்கமையில் நடைபெற்றது போன்ற இனத்துக்கெதிரான வன்முறைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் கருதுகிறோம். இந்த வன்முறைகளின் பின்னணி என்ன இவ்வாறான இனவன்முறைகள் இடம்பெறாமலிருப்பதை எவ்வாறு தடுக்கலாம் என்ற சிபார்சுகளைச் செய்வதற்காகவே ஆணைக்குழுவொன்று நியமிக்கும்படி கோரியுள்ளோம்.
இந்த ஆணைக்குழு சிபாரிசுகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. இதன் மூலம் இனவாதத்தை தூண்டும் பேச்சுகள் போன்றவற்றை எவ்வாறு தடுக்கலாம் எனும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். இதேவேளை அளுத்கமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமான பொதுபலசேனா அமைப்பும் இது தொடர்பாக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment