பீஜீங்: உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொண்டார்.பீஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சம்பியன்ஷிப் போட்டியில் 9.79 நொடிகளில் 100 மீட்டரை ஓடி அவர் தங்கப் பதக்கம் வென்றார்.அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஒரே நேரத்தில் ஓடிய அமெரிக்காவின் ப்ரொமேல் மற்றும் கனடாவின் டெ கிராஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
இந்த இருவரும் 100 மீட்டர் தூரத்தை 9.92 நொடிகளில் ஓடினர்.
அமெரிக்கரான மைக்கேல் ரோட்ஜர்ஸ் 9.94 நொடிகளில் ஓடி நான்காம் இடம் பெற்றார்.
மிகவும் அபூர்வமான வகையில் ஜமைக்காவின் அசாஃபா பவல், அமெரிக்காவின் டைசன் கே மற்றும் பிரான்ஸின் ஜிம்மி விகாவ் ஆகிய மூவரும் 10.00 நொடிகளில் ஓடினர்.
உசைன் போல்ட்
ஒன்பது வீரர்கள் ஓடிய இந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கடைசி இடம் போட்டிகளை நடத்தும் சீனாவின் பிங் டியா சூவுக்கு கிடைத்தது. அவர் ஓடிய நேரம் 10.06 நொடிகள்
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது அவரிடமிருந்து ஜஸ்டின் காட்லின் அதைக் கைப்பற்றுவாரா எனும் எதிர்பார்ப்புகளூக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது.
Leave a comment