காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் “ஊருக்கு ஒரு எம்.பி. வேண்டும்” என்ற கொள்கையை நிலைநிறுத்தி, போட்டியிட்ட ஐ.ம.சு.கூயின் பிரதான வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அல்லாஹ்வின் நாட்டத்துடனும் யுவர்காத்தான்குடி-இனியவன் கருத்துக்கணிப்பின் பிரகாரமும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றார்.
ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் அவிழ்த்துவிடப்பட்ட போலிப் பிரச்சாரங்களும், தனக்கு காத்தான்குடியில் 70 வீதமும், சாணக்கியனின் பல்லாயிரம் வாக்குகளும், ஏறாவூர் தனது கோட்டையும் என கருதி வந்ததாலும், அண்மைக்கால தனது காத்தான்குடி பழைய ஆதரவாளர்களை மறந்துவிட்டு, தான் தனக்கென்று சில “தோழர்”களை வைத்துக்கொண்டு இவ்வூரில் எதைவேண்டுமென்றாலும், சாதித்துவிட முடியும் என்ற எண்ணமும் இன்று அல்லாஹ்வின் உதவியால் சிதைக்கப்பட்டிருக்கிறது.
வாக்கில்லாத தோழர்களின் புதல்வர்களையும், அவர்களது நண்பர்களையும் தனது தேர்தல் அலுவலகத்திற்குள் அழைத்து, பணத்தை மாத்திரம் நம்பி, பெருமிதமான தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில், இவ்வூர் சாதாரண மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
பணத்தை வைத்து எதையும் செய்ய முடியும் என்ற மகிந்த ராஜபக்ஸவின் பிரமாண்டமான கனவு, அன்றும் இன்றும் கலைந்து சிதைந்ததுபோல், இன்று ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் கனவும் கலைந்து சென்றிருக்கின்றது.
காத்தானகுடி ஜம்மிய்த்துல் உலமா சுயமாக இயங்க முடியாமலும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சுயமாக முடிவெடுக்க முடியாமலும், பள்ளிவாயல்களில் நிர்வாகத்தெரிவு, நீதமாக நடக்க முடியாமலும், காதி நீதிமன்றத் தீர்ப்புக்கள் நீதியாக இடம்பெறாமலும், ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படாமலும் இவ்வூரில் பல அநீதிகள் இடம்பெற்று வந்தன.
முழு வீதிக்குமான பணத்தைப் பெற்றுவிட்டு, பாதி வீதி அமைத்தமை, பாடசாலைகளில் அரசியலை நுழைத்தமை, சர்வதேச மைதானமாக அபிவிருத்தி செய்யப்போகனிறேன் என்று கூறி பொதுமைதானத்தை 4 வருடங்கள் இழுத்து மூடி, விளையாட்டு வீரர்களுக்கு மூடுவிழா வழங்கியமை, புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயலை உடைத்துவிட்டு, ஊருக்குள்ளும், அயல் ஊருக்குள்ளும் பல பள்ளிவாயல்கள் அமைத்துக் கொடுத்தமை இப்படி பல ஆயிரம் தவறுகள் ஹிஸ்புல்லாஹ்வை நோக்கி இருக்கின்றன.
அதேபோல், மகிந்தவை ஆதரித்தமை, மகிந்தவுடன் மறைமுக உறவு வைத்திருந்தமை, பாலமுனைக் காணி விவகாரம் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ்மீது சுமத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுக்காவது முன்வந்து மறுப்புக் கூற முடியாத நிலையில் இந்தத் தோல்வியை காத்தான்குடி மக்களில் அதிகமானோர் எதிர்பார்த்தபடியே இப்போது ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவிக்கொள்கிறார்.
ஹிஸ்புல்லாஹ்வின் இத்தோல்வி, ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், காத்தான்குடி மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வின் இத்தீர்ப்பால் உளமகிழ்ந்தவர்களாக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
கடந்த காலங்களை விட, ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஊரில் எதிர்ப்பலைகள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன. இதனை இந்தத் தேர்தல் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றது.
தான்விட்ட தவறு என்ன? தான் எவ்விடயங்களைத் தவிர்க்க வேண்டும்? எவ்விடயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஹிஸ்புல்லாஹ் சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இதுவாகும்.
முன்பு உலமாக்களை மதித்துவந்த ஹிஸ்புல்லாஹ், அண்மைக்காலமாக அற்ப அரசியலுக்காக உலமாக்களை அவமதித்திருந்தது மாத்திரமன்றி, தென்னிந்தியாவில் இருந்து பெண்களுக்கு பயான்கூற என்று, பாடகர்களை அழைத்துவந்து இவ்வூர் உலமாக்களைக் கொச்சைப்படுத்தி இருந்தார்.
நூதனசாலை சிலைவிவகாரங்களுக்கு காத்தான்குடி உலமாக்களின் மார்க்கத் தீர்ப்பை உதாசீனம் செய்து, காலத்தைக் கடத்திவந்தார். இதனோடு சம்பந்தப்பபட்ட உலமாக்களை கேவலமாக விமர்சித்தார். தன்னை எதிர்ப்பவர்களை இவ் ஊரைவிட்டு விரட்டப்போவதாகவும், தனக்குச் சார்பாக நீதி எழுதக்கூடிய நீதிபதியை இம்மாவட்டத்தில் தானே நியமித்திருந்ததாகவும் வீறாப்புவிட்டார்.
குறிப்பாக தேர்தலுக்கு முன்னரான காத்தான்குடியில் இடம்பெற்ற ஜூம்ஆ பிரசங்கம் அனைத்துப் பள்ளிவாயல்களிலும் இவ்வூர் மக்களின் மனநோவின் வெளிப்பாடு தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது.
இத்தோல்வியின் மூலமாக ஹிஸ்புல்லாஹ் நிறைய பாடம் கற்க வேண்டும். தனது 25 வருட கால அரசியலையோ, தனக்குப் பின்னால் வரும் தோழர்களையோ நம்பி அரிசியல் ஆதிக்கத்தை இவ்வூரில் நிலைநிறுத்த முயற்சிக்காமல், தனது தவறைத் திருத்திக்கொள்ள முன்வரவேண்டும்.
சோத்துப் பார்சலுக்கும், அறபிப் பணத்துக்கும் சோரும்போகும் சமூகத்தை இந்த ஊரில் அமைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டிருக்கின்றன. அறிவுள்ள, படித்த நல்லதோர் சமூகத்தை இவ்வூரில் கண்ணியமிக்க உலமாக்களுடன் முன்னின்று உருவாக்க வேண்டும் என்று குரல்கொடுத்த இளம் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இன்று விளித்திருக்கின்றனர். நாளை பல அரசியல் சரித்திரங்கள் இவ்வூரில் இன்ஸா அல்லாஹ் இவர்களால் தடம்பதிக்கலாம்.
தேர்தல் என்பது ஊர்சார்ந்ததாகும். தனிமனிதன் சார்ந்ததோ, தனக்குப் பின்னால் இருக்கும் நாலு தோழர்கள் சார்ந்ததோ அல்ல என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
ஊர் தோற்கவில்லை! புதிய வெற்றிகள் இவ்வூருக்கு இன்ஸா அல்லாஹ் நீங்கள் இல்லாவிட்டாலும், வேறொருவரைக்கொண்டு இவ்வூருக்கு அல்லாஹ் வழங்குவான்.
ஹிஸ்புல்லாஹ்வின் இத்தோல்வியால் அவரது தோழர்களும், தீவிர ஆதரவாளர்களுமே அதிர்ச்சியடைந்திருக்கிறார்களே தவிர, பொதுமக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
“அல்லாஹ் வழங்கும் எந்தத் தீர்ப்பையும் நான் ஏற்றுக்கொள்வேன்” என மேடைகளில் முழங்கும் நீங்கள், அல்லாஹ்வின் இந்தத் தீர்ப்பையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தங்களின் ‘அபிவிருத்தி’ மக்கள் மனங்களை வெல்லவில்லை!
உங்கள் தோல்வியில் கவலையும், சந்தோசமும்கொண்ட ஒருவனாக,
நன்றி,
யுவர்காத்தான்குடிக்காக காசிம் அப்துல் ஸத்தார்
– காத்தான்குடி
Published by


Leave a comment