-
இனியவன்
மட்டக்களப்பு: பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மணித்தியாலங்களே மீதமுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர்களின் தற்போதய மனோநிலையின் அடிப்படையில் புதிய தேர்தல் முடிவு ஒன்று வெளிவரலாம் என்று இரகசிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் சட்டங்களுக்கு அமைய தற்போது அவ்வறிக்கையினை தவிர்த்து வந்தபோதிலும், இத்தகவல்கள் தற்போது வெளிப்படையாகவே குறித்த வேட்பாளர்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கொள்ளும். ஆனால் 3 ஆசனங்களா அல்லது மேலும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது.
நீலக்கட்சிக்கு, கடந்த தேர்தல்களின் போதிருந்த இரண்டாவது பெரும்பான்மை ஆதரவுகள் தற்பொழுது 3 தொகுதிகளிலும் கலைக்கப்பட்டிருப்பதாலும், நீலக்கட்சியை முஸ்லிம்கள் மகிந்தவுடனும், ரக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலையுடனும் சம்பந்தப்படுத்தி வருவதாலும், நீலக்கட்சிக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் முஸ்லிம் வேட்பாளரை வெற்றிபெற வழிவகுக்கும் என்ற தமிழ்மக்களின் கருத்துக்களாலும் மேலும், ஓட்டமாவடி பச்சைக் கட்சிக்கும், ஏறாவூர் மஞ்சள் கட்சிக்கும் மாறியுள்ளதால் நீலக் கட்சியின் பிரதிநிதித்துவத்துக்கு பலத்த பின்னடைவுகள் இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் எனவும் தெரியவருகிறது.
இந்த அடிப்படையில் இரண்டாம் இடத்தை மஞ்சள் கட்சி பெற அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும், 3ம் இடத்தை பச்சைக் கட்சி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1989ற்கு பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களின் அடிப்படையில், சராசரியாக 25,000 வாக்குகள் ஐ.தே.கயிட்டு இம்மாவட்ட மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதனடிப்படையிலும், ஓட்டமாவடியில் தற்போதிருக்கின்ற களநிலவரத்தின் அடிப்படையிலும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரைப் பெறக்கூடிய நிலை ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் விருப்பு வாக்கில் மட்டக்களப்புத் தொகுதியின் நீலக்கட்சியில் போட்டியிடும் பிரதான முஸ்லிம் வேட்பாளர் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்றும் ஆனால், அவர் சார்ந்திருக்கும் கட்சி, அவரது வெற்றியை உறுதிசெய்யும் களநிரவரம் அவரது சொந்த ஊரைத் தவிர வேறு பகுதிகளில் காணப்படவில்லை எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இதன் காரணமாக பிரபலமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அல்லது, ஓருவர் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்படும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
இதைவிட சமூகவலைத்தளங்கள் ஊடாக உலாவரும் எந்த கருத்துக்களும் மக்கள் மனங்களை மாற்றப்போவதில்லை எனவும், மக்கள் ஏற்கனவே தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானித்துவிட்டார்கள் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
-
யுவர்காத்தான்குடிக்காக இனியவன்
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=113)
Leave a comment