“மயில் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலை மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கைவிடவேண்டும்”

faizal cassim– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: எனது நிதியில் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை காட்டி றிசாட்டின் மயில் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலை மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கைவிடவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான பைசால் காசீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது – 04ம் பிரிவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த சாய்ந்தமருது மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு ரூபா 35 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தேன்.

இதன்மூலம் மீனவர்களுக்கான வலைகள், ஆட்டோக்களுக்கான டயர்கள், தையல் மிசின்கள் மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கான உபகரணங்கள் என பலதரப்பட்ட பொருட்களை சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஊடாக கொள்வனவு செய்து அந்நேரத்தில் கட்சியோடிருந்த மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கியிருந்தேன்.

இன்று ஜெமீல் கட்சியை விட்டு வெளியேறி றிசாட்டின் கட்சியில் இணைந்து கொண்டு, இப்போது நான் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளை தான் வழங்கியதாக கூறி இத்தேர்தலில் மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிக்குமாறு அம்மக்களை அவர் கோரியுள்ளார்.

இதன்மூலம் ஜெமீல் ‘ஊரா கோழி அறுத்து உம்மாட பெயரில் கத்தம் ஓத’ முனைந்துள்ளார்.

faizal cassim
பைசால் காசீம்

ஜெமீலுக்கும் சாய்ந்தமருது ஆட்டோ சாரதிகளுக்கு வழங்கப்பட்ட டயர்களுக்கும், மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகளுக்கும், ஏனையவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இவ்வுதவிகள் அனைத்தும் எனது நிதி மூலமே வழங்கப்பட்டது. வாழ்வாதார உதவிகளைப் பெற்ற மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்.

மயில் கட்சியின் தலைவர் றிசாட் கடந்த மஹிந்த அரசில் ஒரு அமைச்சராக மஹிந்த, பஷில் ஆகியோரின் செல்லப் பிள்ளையாக காணப்பட்டவர். ஆனால் அவர் இவ்வமைச்சை பயன்படுத்தி அவரின் சொந்த மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கோ, அவர்களின் விடிவுக்கோ செயற்படவில்லை. மாறாக தனக்கு சொத்து சேர்ப்பதற்கே இவ்வமைச்சை அவர் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான ஒருவர் எமது அம்பாறை மாவட்ட மக்களின் நலனுக்காக ஒரு ரூபாவைக்கூட கொண்டுவராமல் எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அவர் கட்சியில் இத்தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கி அவ்வேட்பாளர்கள் எமது முஸ்லிம் காங்கிரஸ்; பிரதிநிதிகள் செய்த சேவைகளை காட்டி மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Published by

Leave a comment