- NFGG
கொழும்பு: “பாராளமன்ற பிரதிநித்துவம் என்பது மிகப் பெறுமதியான ஒரு பதவி, சட்டவாக்க சபை என்ற அடிப்படையில் அதன் உறுப்பினருக்கு அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு, நுணுக்கமான சமூகப் பார்வை, அதற்கேற்ற ஆளுமை, சமூகம், நாடு, சர்வதேசம் பற்றிய பார்வை போன்ற தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எமக்குக் கிடைத்தால் தேசத்துக்கும், மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் உரிய முறையில் நிறைவேற்றுகின்ற முன்னுதாரணமாக இருப்போம்.” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினால் வெளியான தினகரன் பத்திரிகைக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தச் செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு.
கேள்வி: கடந்த காலங்களில் SLMCன் அரசியல் நகர்வுகள் பற்றி NFGG மிகக் கடுமையாக விமர்சித்து வந்துள்ள நிலையில் நீங்கள் எந்த கொள்கை அடிப்படையில் இணைந்துள்ளீர்கள்?
அப்துர் ரஹ்மான்: அரசியல் என்பது ஒரு செம்மையான நேர்கோட்டுப்பாதை இல்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணிகள், ஒப்பந்தங்கள், அணிசேர்வுகள் என்பவைகள் தவிர்க்க முடியாதவைகளாகும். ஆனால் அந்த கூட்டணிகளும், ஒப்பந்தங்களும், அணிசேர்வும் தமது இலட்சியத்தையும், இலக்கையும் நன்மையான வழிமுறைகளினூடாக நகர்த்துபவைகளாக அமைய வேண்டும்.
அப்படி அமைந்தால் அது பெறுமானமுள்ளது. மாறாக தமது கொள்கைகளையும்,இலட்சியங்களையும் மறந்து சுயநலத்துக்காக கரைந்து போவது பிழையான ஒன்றாக நாம் பார்கின்றோம். எனவேதான் இந்த அடிப்படையில் நின்றுகொண்டு நாம் இந்த சமூகத்தின் சாத்தியமானவற்றை சாதிப்பதற்காகவும், சமூக நலன் அடிப்படையிலும் பொதுவான இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான ஒரு கூட்டணியாக நாம் இதனைப் பார்கின்றோம். அத்தோடு இந்தக் கூட்டணியை விமர்சிப்பவர்களுக்கும் இந்த தளத்தில் நின்று கொண்டு இதனைப் விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இங்கு SLMCல் நாங்களும் NFGGயோடு அவர்களும் இனையவில்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவர்கள். எங்களுக்கென்று
கொள்கைகள்,இலக்குகள், வழிமுறைகள் என்பன காணப்படுகின்றன அப்படியிருந்தும் நாங்கள் பொது நோக்கத்திற்காகவும், சமூக, பிரதேச நலனுக்காகவும், குறிப்பாக கடந்த ஜனவரி 8ம் திகதி ஏற்படபடுத்தப்பட்ட நல்லாட்சிக்கான பயணத்தின் அடித்தளத்தைப் பாதுகாப்பதற்காகவும் இனைந்துள்ளோம் என்பதை எங்களுடைய ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிற்றோம்.
நாம் கடந்த காலங்களில் வடமாகாண சபைத் தேர்தலின் போது TNAயுடனும், ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது UNPயுடனும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுக் கூட்டணியுடனும் இணைந்து பொதுக் கொள்கையின் அடிப்படையிலும், சமூகநலனை மையப்படுத்தியும் பணியாற்றினோம். இந்த இனைவுகளின் போது நாங்கள் மிகத்தெளிவான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டோம். இச்சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒருபோதும் எங்களுடைய கொள்கைகளையும், இலட்சியங்களையும் விட்டுக்கொடுத்து கரைந்து போகாமல் பொது, சமூகநல திட்டங்களை முதன்மைப்படுத்திய வரலாறுதான் எம்மிடமுள்ளன. அப்படியான வரலாற்றுப் பயணத்தில் முஸ்லீம்களுக்கு மத்தியில் இனைந்த அரசியல் பண்பாடுகளையும். சாத்தியப்பாடுகளையும் உருவாக்கிக் காட்டியுள்ளோம் என்பதில் நாங்கள் சந்தோசமடைகின்றோம்.
கேள்வி: SLMC + NFGG என்கின்ற இந்தக் கூட்டணியானது தேர்தலின் பின்னரும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து செல்லுமா?
அப்துர் ரஹ்மான்: உண்மையில் நாம் மிகத் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் அதாவது இந்தக் கூட்டணியானது ஒரு சந்தர்ப்பவாத கூட்டனியோ, தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டணியல்ல. மாறாக இது பொதுநலன், பிரதேசநலன்,மற்றும் நாட்டில் ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பு என்கின்ற விடயங்களை பிரதானமாக கொண்டுள்ளது.
இப்படியான அம்சங்களை தொடர்ந்து பின்பற்றுவதனூடாக தேர்தலின் பின்னரும் புரிந்துணர்வு அரசியல், விட்டுக்கொடுப்புஅரசியல், சகவாழ்வு அரசியல்,இணைந்த அரசியல் என்ற ஒழுக்கங்களை SLMC வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் நாம் அவர்களோடு இனைந்து செயற்படுவதில் தவறில்லை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
கேள்வி: நீங்கள் போட்டியிடுகின்ற மாவட்டங்களில் குறிப்பாக மட்டக்களப்பில் முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மற்றும் அமைச்சர் அமீர் அலி, மற்றும் பரவலான சொல்வாக்குள்ள அலிஸாஹீர் மௌலானா போன்றோர்கள் போட்டியிடுவதால் உங்களது வெற்றிவாய்ப்புக்கள் எப்படி அமையும் என்று எதிர்பார்கின்றீர்கள்?
அப்துர் ரஹ்மான்: இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இன்று இந்த நாடு மாற்றத்தை எதிர்பார்கின்றது. அந்த மாற்றமானது கடந்த ஆறு மாதகாலமாக அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள நல்லாட்சிக்கான அடித்தளத்தை பாதுகாப்பதற்கான பிரதிநிகளைத் தெரிவு செய்வதனூனாக அடைந்து கொள்ள முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இந்தவகையில் இத்தேர்தலில் பலம் மிக்க அரசியல் வாதிகளாக இருந்தாலும், பல மில்லியன் கணக்கில் அபிவிருத்தி செய்பவராக இருந்தாலும் மக்கள் சமூக, நாட்டு நலனை பற்றிய முதன்மைப்படுத்தலானது எமக்கு சாதகமாகவேயுள்ளது. ஏனென்றால் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் கடந்த காலத்தில் அவர்கள் இந்த சமூகத்தை தொடர்ந்தேர்சியாக ஏமாற்றி வந்ததும், அவர்களது இயலாமையும், அப்பாவித்தனமும் மக்கள் மத்தியில் அரசியல்ரீதியான வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம் என்பவைகளை ஆழமாக உருவாக்கிவிட்டது. இதுவும் எமக்கு மிகச்சாதகமாக அமைந்துள்ளது.
அதேநேரம் எங்களது வெளிப்படைத்தன்மையும், சமூக்க்கடமைகளைகளும் மக்கள் விரக்திக்கான தீர்வாகவும், புனர்நிர்மாணமகவும் பிரகாசித்தை வருவதனை களநிலவரம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அத்தோடு மக்கள் மத்தியில் இவர்கள் விதைத்து வருகின்ற பிரதேசரீதியான பிரதிநிதித்துவம் என்கின்ற பிரதேசவாதமும், மற்றும் இனவாதத்துக்கு அப்பால் இன்று பிரயோசனமான, மக்கள் குரலாக ஒலிக்க வேண்டிய பிரதிநித்துவம் எமக்கு தேவை என்கின்ற மாற்றம் பரவலாக ஏற்பட்டுவருவதனாலும் எமக்கான வெற்றிவாய்புக்கள் தென்படுகின்றன.
அல்லாஹ் போதுமானவன்.
அத்தோடு கடந்த காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் செயற்பாடுகளிலும், எங்களது அரசியல் ஒழுக்கங்களையும் மக்கள் தங்களுடைய சமூக ஒழுக்கங்களாகவும், சீரழிந்து போயுள்ள முஸ்லீம் அரசியலுக்கான தீர்வாகவும், நம்பிக்கையாகவும் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருவது இன்ஷாஅல்லாஹ் நாம் இரண்டு மாவட்டங்களிலும் கனிசமான ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவோம் என்று நம்புகின்றோம்.
கேள்வி: இந்த தேர்தலினூடாக இந்த நாட்டுக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்?.
அப்துர் ரஹ்மான்: இந்த நாட்டில் இன்று அச்சுறுத்தலை சந்தித்துள்ள நல்லாட்சிக்கான அத்திவாரத்தை பாதுகாப்பதற்கு நாம் முன்வருவதோடு, அந்த ஆட்சியினை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கும் தமது ஆதரவுகளை பூரனமாக வளங்க வேண்டும் என்று முதலாவதாக கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்ததாக இந்த நாட்டின் தேசிய சொத்துக்களையும், வளங்களையும் பாதுகாக்கும் வகையில் எங்களுடைய பிரதிநிகளை தெரிவு செய்வதற்காக வாக்களிக்க வேண்டுமே தவிர ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களை வீட்டுக்கனுப்ப நாம் முன்வர வேண்டும்.
அதேபோல நாம் முஸ்லீம் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள இனவாதம், பிரதேசவாதம், மற்றும் குறுகிய அரசியல்லாபம் என்பவைகளை இத்தேர்தலூடாக தோற்கடிப்பதற்கு முன்வர வேண்டும் என்ற செய்தியை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி: உங்களுடைய நல்லாட்சிக்கான தேசிய முண்ணிக்கு பாராளமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தால் அதனை எவ்வாறு பயண்படுத்துவீர்கள்?
அப்துர் ரஹ்மான்: பாராளமன்ற பிரதிநித்துவம் என்பது மிகப் பெறுமதியான ஒரு பதவி, சட்டவாக்க சபை என்ற அடிப்படையில் அதன் உறுப்பினருக்கு அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு, நுணுக்கமான சமூகப் பார்வை, அதற்கேற்ற ஆளுமை, சமூகம், நாடு, சர்வதேசம் பற்றிய பார்வை போன்ற தகுதிகள் இருக்க வேண்டும்.
நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கு இந்த பதவி கிடைத்தால் ஒரு உருப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கௌரவத்தோடும், பொறுப்புணர்வுடனும் தேசத்துக்கும், மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் உரிய முறையில் நிறைவேற்றுகின்ற முன்னுதாரணமாக இருப்போம்.
அத்தோடு முஸ்லீம் சமூகத்தைப் பொறுத்த வரையில் பாராளமன்ற பதவி எப்படி மாறியிருக்கின்றது என்றால்.
பாராளமன்றத்தில் எப்படியாவது காலத்தைக் கழிப்பது, அங்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகளைக் கொண்டு வந்து வீதி போடுவது, அமைச்சர்கள் யாரையாவது பிடித்து வந்து நிதியைப் பெற்று கட்டடம் கட்டுவது, திறப்பு விழா நடத்துவது, மாலை அணிவது, போட்டோ பிடிப்பது, மக்களுக்கு சாப்பாடு போடுவது, …. அத்தோடு காரியமுடிந்தது. மீண்டும் அடுத்த தேர்தல் வரும். இதே அரசியல் நடக்கும். இதுதான் பாரளமன்ற உருப்பினர்களுடைய அரசியல் நடவடிக்கையும்,அவர்கள் பற்றிய மக்களுடைய மனப்பதிவும்.
இதனை முற்று முழுதாக மாற்றி நாம் சமூகத்துக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அர்ப்பணத்துடன் நேர்மையாக உழைக்கின்ற முன்மாதிரியான தரமிக்க பாராளமன்ற உருப்பினராக இருப்பதோடு, இனவாதம், பிரதேசவாதம் கடந்து தேசப்பற்றுடன் சிந்திப்பவர்களாக நாமிருப்போம். அதன்மூலமாக அனைத்து மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உழைப்போம். இத்தேர்தல் மூலமாக அந்த வாய்ப்புக் கிடைத்தால் பொறுப்புடனும், முழுநாட்டுக்கும் முன்மாதிரியாகவும் அந்தக் கடமைகளை நிறைவேற்றுவோம். இன்ஷாஅல்லாஹ்.
Leave a comment