கூகுள்- சுந்தர் பிச்சை: கடந்து வந்த பாதை

sunder pichai googleலண்டன்: கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றிருக்கும் 43 வயது சுந்தர் பிச்சையின் வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது. சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அவர், பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்றிருக்கிறார்.

பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.

ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.

sunder pichai google
சுந்தர் பிச்சை

அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.

அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.

அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள்

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஒபரேட்டிங் சிஸ்டமான அண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

இதற்கும் முன்னதாக, அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லோரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்துவந்தாலும், இப்போது, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

Published by

Leave a comment