காத்தான்குடி: “இந்த நாட்டில் இனவாத அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவித்து, சமூகங்களுக்கிடையில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கி, அராஜக அரசியலை உருவாக்கிய மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனவரி 8ம் திகதி தோற்கடிக்கப்பட்டார். அதன் பின், பலம் பெற்று வரும் புதிய அரசியல் மாற்றத்தின் விளைவாக, கடந்த கால அராஜக, ஊழல், மோசடிகள் நிறைந்த மஹிந்த கம்பனிகள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த நல்லாட்சியை இல்லாதொழித்து,
மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர்வதற்கான ஒர் சதியாகவே மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் 2ம் இலக்கத்தில் போட்டியிடுபவருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் அவரின் உரையில், “18வது அரசியல் யாப்புத்திருத்தத்தின் மூலம் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வந்து, அரசியல் அராஜகம் புரிவதற்கு முயற்சித்த மஹிந்த தோற்கடிக்கப்பட்டு, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் பாராளுமன்றம் கலைக்கபப்பட்ட நிலையில், பிரதமர் பதவிக்கு மோகம் கொண்டு மஹிந்த மீண்டும் இந்தத்தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று கூட்டுச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த நல்லாட்சியை சீர்குலைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தனது கைக்கு எடுப்பதற்கு முயற்சிக்கின்றார். சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கத்தக்கதாக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை திசை திருப்பி ஜனாதிபதியை பணயக் கைதியாக்கி, அவரை அரசியலிலிருந்து இல்லாமல் செய்வதற்கான சதி முயற்சியையே மஹிந்த தரப்பு இப்பொழுது முடக்கி விட்டுள்ளது. குற்றப் பிரேரணை ஒன்றைக்கொண்டு வந்து ஜனாதிபதியின் பதவியைப் பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகிறது. வெற்றிலைக்காகப் போடப்படும் வாக்குகள் நல்லாட்சியை இல்லாதொழிக்கும் மஹிந்த தரப்புக்கு அது வலு சேர்க்கும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமக்கு முன்னால் பிரதானமான இரண்டு வேட்பாளர் தெரிவுகள் இருந்ததைப்போன்று இப்பொதுத்தேர்தலிலும் பிரதானமான இரண்டு அணிகளே எமது தேர்வுக்காக காணப்படுகின்றன. ஒன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் ஏற்படுத்திய நல்லாட்சியினை வலுப்படுத்தும் பாராளுமன்றத்தை அமைப்பதற்கான ஆணையினை எம்மிடம் வேண்டி நிற்கும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியாகும். இதற்கு மறுதலையாக நாம் ஏற்கனவே அனுபவித்து வந்த அந்த இருண்ட யுகத்திற்குள் இந்த நாட்டினைத் தள்ளி, எம்மால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரி பால அவர்களை அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கச்செய்து, நாட்டில் மலர்ந்திருக்கும் நல்லாட்சியினை இல்லாதொழிக்க வெற்றிலைச சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பாகும். இந்த இரண்டு பிரதான அணிகளில் எமது தேர்வு எது என்பதில்தான் எமது இருப்பிற்கான உத்தரவாதம் தங்கியுள்ளது. நாம் மிக ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணமாக இது காணப்படுகின்றது.” என்று குறிப்பிட்டார்.
Leave a reply to mohmedrislan Cancel reply