கொழும்பு: முன்னாள் எம்.பிக்கள் பலர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காது தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மாத்திரமே தாம் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு கட்டணங்களை செலுத்தி தேர்தலுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களில் 68 வீதமானவர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் 4183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு கட்சி சார்பிலும் 262 வேட்பாளர்கள் வீதம் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். இவர்களில் ஜே.வி.பியைச் சேர்ந்த 261 வேட்பாளர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த 232 வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 220 வேட்பாளர்களுமே தமது சொத்து விபரங்களை வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று குறிப்பிட்டார்.
Leave a comment