காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் அரசியல் இலாபத்திற்காகப் பொய் சொல்லக்கூடாது. ஒரு தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் காற்றடிக்கும் திசைக்கெல்லாம் திரும்புகின்ற துரும்புபோல பலவீனமாக இருந்து செயற்படக்கூடாது. அவர் தனது நாக்கையும், வாக்கையும் காப்பாற்றி ஓர்மை உறுதியுடன் செயற்பட வேண்டும் என ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
‘காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் UNP அமைப்பாளர் இல்லை – ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் எழுத்து மூலம் அறிக்கை’ எனும் தலைப்பில் இன்று இணையதளமொன்றில் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக இணையதளங்களுக்கு புவி. எம். ஐ. றஹ்மதுழ்ழாஹ் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
காத்தான்குடிப் பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் அமைப்பாளராக அல்ஹாஜ். எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருவதை நானும், இவ்வூர் மக்களும் நன்கறிவார்கள். எனினும், கடந்த 24.06.2015 அன்று ‘முஸ்தபா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரில்லை- அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு’ என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றில் செய்தியொன்று வெளியாகி இருந்ததைக் கண்டேன். அந்தச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:
‘காத்தான்குடியில் எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என பொய் கூறித் திரிகின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இன்று (24.6.2015) புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீமை சந்தித்தனர்.’
‘ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீமின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ. சசிதரன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அமைச்சர் கபீர் ஹாசீமை இவர்கள் சந்தித்தனர்.’
‘இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத்திலுள்ள பிரதேச அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.’
‘இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் பொய் கூறி அரச அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளையும் ஏமாற்றி வருவது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீமின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.’
‘இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம், காத்தான்குடியில் எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரோ அல்லது எனது இணைப்பாளரோ இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.’
‘இவர், தான் ஒரு அமைப்பாளர் என பொய் கூறி வருவதாகவும் அமைச்சர் கபீர் காசீம் கூறினார். கர்பலா பாலமுனை வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக இவரிடம் கேட்டபோது அந்த வீதி புனரமைப்பு குறித்து என்னிடம் பலரும் சுட்டிக்காட்டியதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனால் அந்த வீதியினை நிர்மானிப்பதற்கு பணம் ஒதுக்கினேன்.’
‘இந்நிலையில் எனக்குத் தெரியாமல் எனது பிரத்தியேக செயலாளரிடம் மேற்படி முஸ்தபா என்பவர் வந்து, தான் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என பொய் கூறி அந்த வீதி நிர்மானம் முஸ்தபா என்பவரினால் இடம் பெறுவதாகவும் எனது பிரத்தியேக செயலாளரிடம் கையொப்பம் பெற்றுச் சென்றுள்ளார் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டார்.’
‘முஸ்தபாவினால் ஊடகங்களுக்கு இந்த வீதி தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்தினை அமைச்சரிடம் இதன்போது காண்பித்தனர். இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளது நான் இல்லை எனவும், நான் இதற்கு கையொப்பமிட்டதாக முஸ்தபா ஊடங்களுக்கு பொய் கூறியுள்ளார் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டினார்.’
‘மேற்படி முஸ்தபா என்பவர் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் இல்லை என்பதை நான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கட்சியின் தொண்டர்கள் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர்கள் அணைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.’
‘ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என கடித தலைப்பினை அச்சிட்டு அதனை அவர் பயன்படுத்தி வந்தால் அவர் மீது கட்சி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் மேலும் குறிப்பிட்டார்.’
‘இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ. சசிதரன், கல்குடா தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம். மாசிலாமணி, லிங்கன், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர்களான வி.ரி.எம்.முபாறக் மற்றும் ஏ.அனீஸ் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.’
‘இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன. இந்த சந்திப்புக்கு மேற்படி காத்தான்குடி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.’ – இவ்வாறு அச்செய்தி காணப்பட்டது.
இச்செய்தி தொடர்பில் நான் குறித்த எச்.எம்.எம். முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, ‘இது தனக்கு எதிராகச் செயற்படும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு சிலரின் திட்டமிட்ட நடவடிக்கையாகும். இதனை நான் பெரிதுபடுத்தத் தேவையில்லை. நான் அமைப்பாளர் இல்லையென்றால், சவூதி அரேபியா அரசாங்கம் வழங்கிய ஈத்தம்பழப் பொதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளிக்குமாறு முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஹலீம் அவர்கள் என்னிடம் ஒப்படைத்திருப்பாரா?’ எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதன் பின்னர் கடந்த 15.07.2015 அன்று ஜனாப் முஸ்தபா என்னுடன் தொடர்பு கொண்டு, இன்றிரவு ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் அவர்களைச் சந்திக்கச் செல்லவுள்ளோம். நீங்களும் வருகிறீர்களா?’ எனக் கேட்டார். நானும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏற்கனவே 24.06.2015 அன்று குறித்த இணையதளத்தில் அவரால் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடன் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தேன்.
அன்று பி.பகல் 01:00 மணியளவில் நாம் ஒரு வேனில் காத்தான்குடியில் இருந்து புறப்பட்டோம். எம்மோடு காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுத் தலைவர் எனப்படும் கே.எம்.எம். அலியார் ஜே.பி, காத்தான்குடி ஐ.தே.க. மத்திய குழுவின் செயலாளர் எனப்படும் ஆசிரியர் ஏ.எல்.ஏ. கையூம் BA, மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC- NFGG கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடும் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் ஆகியோரும் வந்திருந்தனர்.
இரவு 10:00 மணியளவில் கண்டி – கொழும்பு வீதியில் கேகாலை நகரையடுத்துள்ள அம்பிட்டிய தோட்ட பங்களாவில் அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்களை நாம் சந்தித்தோம். பலநூறு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அவரைச் சந்திப்பதற்காக அங்கு குழுமியிருந்தனர். அவர்களைச் சந்தித்த பின்னர் எம்முடனான சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஐ.தே.கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது எதிர்கால நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக வகுத்திருக்கும் வியூகம் குறித்து அமைச்சரால் விளக்கமளிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே ஐ.தே.கட்சியின் சின்னத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தரப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளிட்ட தமிழ் வேட்பாளர்களையும், ஐ.தே.கட்சியுடன் இணைந்துள்ள மு.கா.வின் வேட்பாளர் பட்டியலில் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானையும் போட்டியிடச் செய்துள்ளதாகவும் விபரிக்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.தே.கட்சியின் பட்டியலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு காத்தான்குடிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக ஐ.தே.கட்சிக்காகச் செயற்பட்டு வரும் நாங்கள் எவ்வாறு ஆதரவளித்துச் செயற்படுவது? என்றும், ஊவா மாகாண சபைத் தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தோற்கடிக்க ஐ.தே.கட்சியின் தலைமையில் நிறுவப்பட்ட பொதுக்கூட்டணியில் முதன் முதலில் இணைந்து கொண்டவர்களுமான ந.தே.மு. வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே எம்மால் காத்தான்குடி பிரதேச மட்டத்தில் வேலை செய்ய முடியும் என்றும் காத்தான்குடி ஐ.தே.க. அமைப்பாளர் முஸ்தபாவினாலும், ஏனையவர்களாலும் அங்கு கருத்துரைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் அவர்கள், அவ்வாறே காத்தான்குடிப் பிரதேசத்திற்குள் மாத்திரம் நீங்கள் செயற்படுங்கள். எவ்வாறாயினும் அமையப் போகும் நாடாளுமன்றத்திலும், நல்லாட்சி அரசாங்கத்திலும் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் போன்ற புத்திஜீவிகளின் வருகை அவசியமானது எனக்கூறி காத்தான்குடி ஐ.தே.க. அமைப்பாளர் முஸ்தபா மற்றும் ஐ.தே.க. மத்திய குழுவின் தலைவர், செயலாளரது வேண்டுகோளுக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.
அவ்வாறு காத்தான்குடிப் பிரதேச மட்டத்தில் மாத்திரம் தாம் செயற்படுவதற்கு எழுத்து மூலம் கட்சியினால் அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் முன்வைக்கப்பட்டபோது, அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரும், செயலாளருமான கபீர் ஹாசீம் அடுத்த நிமிடமே அவரது இணைப்புச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விபரங்களை எல்லாம் எடுத்துக்கூறி கடிதம் ஒன்றைத் தயார் செய்யுமாறும், தான் 17ம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.க. தலைமையகமான ‘கொத்தாவிற்கு வருகை தந்து அதில் கையெழுத்திடுவதாகவும் கூறினார்.
மாத்திரமன்றி, பொறியியலாளர் அப்துர் றஹ்மானை விழித்த அவர், நீங்கள் வெள்ளிக்கிழமை ‘கொத்தாவுக்கு வந்து குறித்த கடிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பு மிக சுமூகமாக நடைபெற்றது. தேநீர் உபசாரமும் வழங்கப்பட்டது.
24.06.2015ம் திகதிய இணையதளச் செய்தியில் அமைச்சர் கபீர்; ஹாசீம் கூறியதாகத் தெரிவித்திருந்த கருத்துக்கமைய அவர் முஸ்தபாவைக் கண்டவுடன் ஆத்திரப்படவில்லை. முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. பொய்யன், மோசடிக்காரன் என்று அவருக்கெதிராக எந்த நடவடிக்கைகளும் அவர் எடுக்கவில்லை. இறுதியில் அவருடன் அனைவரும் நின்று புகைப்படமும் பிடித்துக் கொண்டு இரவு 12:30 மணியளவில் நாம் விடைபெற்றோம்.
இந்தப் பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையான தீர்;மானத்தின் அடிப்படையில்தான் சகோதரர் எச்.எம்.எம். முஸ்தபா அவர்கள் காத்தான்குடி ஊர்வீதியில் நடைபெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேடையேறி உரையாற்றியதுடன், பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் அவர்களை காத்தான்குடிப் பிரதேச ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறெல்லாம் என் முன்னலையில் தெரிவித்த, நடந்து கொண்ட ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் அவர்கள், இப்போது அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக மிக நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் ஐ.தே.கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்து வந்த சகோதரர் முஸ்தபாவை ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் இல்லை என எழுத்து மூலம் அறிக்கை விட்டிருப்பது அப்பட்டமான துரோகத்தனமான செயலாகும். அவரின் இந்த முன்னுக்குப் பின் முரணான செயற்பாட்டை ஒரு கிழம் பத்திரிகையாளன் என்ற வகையிலும், ஐ.தே.கட்சியின் முன்னாள் பிரதேச அமைப்பாளன் மற்றும் ஆதரவாளன் என்ற வகையிலும் நான் மிக வன்மையாக்க கண்டிக்கின்றேன்.
ஒரு முஸ்லிமுக்கு நாக்கும், வாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். கழுத்தே போனாலும் தான் பேசிய வார்த்தைகளில் இருந்து அவன் மாறுபாடு செய்யக்கூடாது. ஒரு தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் காற்றடிக்கும் திசைக்கெல்லாம் திரும்புகின்ற துரும்பாக இருக்கக்கூடாது. உருக்குப் போல் உறுதியுடன் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் கேவலமான பச்சோந்தித்தனமான, சந்தர்ப்பவாத அரசியல் செய்வதை விட வேறு ஏதாயினும் வேலையை அவர் பார்க்கலாம். கட்சியின் செயலாளர் அல்ல, வேறு யார் எந்தவிதமான அறிக்கைகளை விட்டாலும் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள ஐ.தே.க. ஆரவாளர்கள் இம்முறை பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களையே ஆதரிப்பதாகவும், அவருக்காகப் பிரச்சாரம் செய்வதாகவும் கடந்த 30.07.2015 அன்று காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் ஒன்றுகூடி ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து விட்டார்கள்.
உண்மையில், ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்கள் எழுத்து மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஜனாப். எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் இப்பிரதேசத்தின் ஐ.தே.கட்சியின் அமைப்பாளராகச் செயற்படாதிருந்தால் அல்லது நியமிக்கப்படாதிருந்தால் அவரது அழைப்பை ஏற்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே அவர்கள் எவ்வாறு கடந்த 26.06.2015ம் திகதி பாலமுனைக் கிரமத்திற்கு கர்பலா வீதிப் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவரது சொந்த உலங்கு வானூர்தியில் இங்கு வந்து கலந்து கொண்டிருக்க முடியும்?
அதுவும் 24.06.2015 அன்று கட்சியின் பொதுச் செயலாளரால் முஸ்தபா அமைப்பாளர் இல்லை என்று கூறியதாக செய்திகள் வெளியான இரண்டு தினங்களிலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளரால் எவ்வாறு இப்படி வருகை தரவும், அந்த முஸ்தபாவை அருகில் வைத்துக் கொண்டு உரையாற்றவும் முடியும்? அப்படியானால் தேசிய அமைப்பாளர் தயாகமகேவுக்கு எதிராகவும் கட்சியின் செயலாளர் அறிக்கையொன்றை விடுவாரா? அவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பாரா? என நான் கேட்க விரும்புகின்றேன் என புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a comment