SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 05

nfgg slmc– புவி. எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ்

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC சார்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் போட்டியிடும் பொறியியாளர்களான ஷிப்லி பாறூக் மற்றும் எம்.எம். அப்துர் றஹ்மான் ஆகிய இருவரில், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்தால் அவரது தோல்வி காத்தான்குடி மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பாரிய இழப்பாக அமையாது,

அவர் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையில் ஆளுந்தரப்பிலுள்ள ஒரு ஒரு உறுப்பினராக இருந்து அவரால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட ஜெ. நஸீர் அகமட்டின் ஆதரவுடன் எமது காத்தான்குடிக்கும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் பல்வேறு அளப்பரிய பணிகளைச் செய்ய முடியும் என்ற கருத்தினை கடந்த 04வது தொடரில் நான் முன்வைத்திருந்தேன்.

இந்தக் கருத்தினால் விசனமடைந்த அவரது தீவிர ஆதரவாளரான ஹாஜியார் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து மிக மோசமான வார்த்தைகளால் ஏசி, எச்சரிக்கையும் செய்தார். இதனை பொறியியலாளர் ஷிப்லி பாறூக், SLMCவின் கொள்கைபரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என் முபீன், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர் எம்.ஐ.எம். லத்தீப் ஹாஜியார் உள்ளிட்ட பல சகோதரர்கள் மிகவும் சமீபத்தில் இருந்தே நேரில் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

என்னை வழிமறித்து மிக மோசமான வார்த்தைகளால் பகிரங்கமாக எச்சரித்த அந்த ஹாஜியாரும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களைப் போலவே முகம் நிறைந்த அடர்ந்த வெண்தாடியைக் கொண்டிருந்தது மட்டுமன்றி, நீண்ட ஜுப்பாவும் அணிந்து பூரணமான இஸ்லாமிய ஆடை மற்றும் இஸ்லாமிய உருவத் தோற்ற ஒழுங்கிலும் காணப்பட்டார்.

அவரது நாகரீகமற்ற அந்த எச்சரிப்புக்கு பதிலளித்த நான், உமது வயதையும் நீர் அணிந்திருக்கின்ற இஸ்லாமிய உடையையும், முகத்தில் வைத்திருக்கின்ற தாடியையும் பேணி வார்த்தைகளை வெளியிடுமாறும், உமது பாணியிலேயே நானும் தரமிறங்கி இவ்விடத்தில் பேசினால் நீர் அனைத்தையும் அவிழ்த்துவிட்டுச் செல்ல நேரிடும் என்றும் சுருக்கமாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றேன்.

அவரை அருகில் நின்ற லத்தீப் ஹாஜியார் சமாதானப்படுத்தி அப்பால் அழைத்துச் சென்றார்.
இச்சம்பவத்திலிருந்து மேற்குறிப்பிட்ட எனது கருத்து பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களையும், அவரின் ஆதரவாளர்களையும் வெகுவாகத் தாக்கமடையச் செய்திருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

உண்மையில் நமது முஸ்லிம் சமூகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் அரசியலில் பதவி உயர்வுகளைப் பெறும் நோக்குடன் தேர்தல்களைப் பயன்படுத்தி வருவதை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும்போது, ‘மக்களே..! என்னைத் தெரிவு செய்யுங்கள். நான் நான்கு வருடங்களுக்கு இந்தச் சபையிலிருந்து உங்களுக்குச் சேவையாற்றுவேன்’ என்று கூறி வாக்குக் கேட்பார்கள். மக்களும் அவரை ஆதரித்து தெரிவு செய்வார்கள்.

ஆனால் அவர் அந்தச் சபையின் பதவிக்காலம் முடிவதற்கிடையில் ஒரு மாகாண சபைத் தேர்தல் வந்தால் அதிலும் போட்டியிடுவார். அவ்வாறு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் அச்சபையின் பதவிக் காலம் முடிவதற்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று வந்தால் அதிலும் போட்டியிடுவார்.

இப்படி மக்கள் வழங்கிய பெறுமதிமிக்க வாக்கு ஆணையை எந்தவிதமான பெறுமானமும் இல்லாமல் இடைநடுவில் தூக்கியெறிந்துவிட்டு, தானும் எம்.பி.யாக வேண்டும்; தானும் மாகாண சபை உறுப்பினராக வேண்டும் என பதவி ஆசை கொண்டு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை, அவர்களுக்கு ஆணைகள் வழங்கித் தெரிவு செய்த வாக்காளப் பெருமக்களே துணிந்து நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். இன்றேல், நமது சமூகத்தில் இதுவும் ஒரு தொற்று நோயாகத் தொடரும் என்பதிலும், மக்கள் வழங்குகின்ற ஆணைகளுக்கு எவ்விதப் பெறுமதியும் இல்லாமல் போகும் என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை 2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் அமோகமாக வாக்களித்து தெரிவு செய்திருந்தனர். எனினும் அவர் முதலமைச்சராகப் பதவியில் அமராவிட்டாலும் 10 மாகாண அமைச்சுக்களைப் பெற்று பதவியில் அமர்ந்தார்.

இரண்டு வருடங்களில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் அவருக்கு அளித்த அந்த நம்பிக்கைக்குரிய ஆணையைப் புறந்தள்ளிவிட்டு, 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்றார். இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நம்பிக்கையுடன் அளித்த அந்த வாக்குகளுக்கும், அவருக்கும் பிரதியீடாக காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு சப்பாத்துக்கடை வியாபாரியே கிழக்கு மாகாண சபைக்கு மக்களின் பிரதிநிதியாகச் சென்றார்.

இதுபோலவே, 2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத் அவர்களும் இம்மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்து விட்டு 2010ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

இவ்வாறு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைகளை மதிக்காமல் தமது பதவி ஆசையின் நிமித்தம் கீழவைகளை விட்டும் நாடாளுமன்றத்திற்கே சென்று அரை மந்திரிகளாகவும், முழு மந்திரிகளாகவும் தம்மையும், தமது வாழ்க்கைத் தரங்களையும் உயர்த்திக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இந்த வழித் தொடரிலேயே இப்போது பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் 2012ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20407 முஸ்லிம் வாக்காளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அவருக்கு வழங்கியிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான ஆணையை தூக்கிக் கடாசிவிட்டு, நாடாளுமன்றம் செல்வதற்காக இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

உண்மைகளை பொறியியல் பட்டம் பெற்ற இவர்கள் மட்டும் மேடைகளில் நின்று மக்கள் மத்தியில் சொன்னால்தான் அது உண்மையாகும் என்பதல்ல. என்னைப் போன்ற ஏழாம் வகுப்புப் படித்தவர்களும் உண்மையை உரத்துச் சொல்லலாம். ஏழையோ அல்லது படிக்காதவனோ சொல்வதால் ஒரு போதும் உண்மை பொய்யாகிவிடாது.

உண்மையில் பொறியியலாளர் ஷிப்லி அவர்கள் இந்த மாவட்ட முஸ்லிம் மக்களை மதிப்பவராகவும், அவர்களின் ஆணைக்கமைய கிழக்கு மாகாண சபையில் இருந்து சேவை செய்யவும் எண்ணமுடையவராக இருந்திருந்தால் அவர் இச்சபையின் பதவிக்காலம் முடியும் வரைக்கும் அங்கிருந்து சேவைகள் செய்யலாம்.

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பலாம். ஏன் நாடாளுமன்றத்திலிருந்து குரல் எழுப்பினால்தான் அது மக்கள் பிரதிநிதியின் குரல் எனும் அந்தஸ்தைப் பெறுமா? மாகாண சபையிலிருந்து குரல் கொடுத்தால் அது மக்கள் பிரதிநிதியின் குரலாகாதா?

மக்கள் பிரதிநிதிகள் மக்களை மிக இலகுவாக ஏமாற்றுகின்றார்கள் என்பதற்கு இவ்விதமாக மக்களின் ஆணைகளை இடைக்காலத்தில் புறந்தள்ளிவிட்டு மேலவைகளை நோக்கிப் புறப்படுவோரின் செயற்பாடுகள் நல்தொரு உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறு மக்களின் ஆணைகளை மதியாது இடைக்காலத்தில் மக்களைக் கைவிட்டு விட்டு, மீண்டும் மேலவைகளுக்காகத் தேர்தலில் நின்று மக்களின் ஆணைகளைக் கோரும் ஏமாற்று வேட்பாளர்களை மக்களே புறந்தள்ளி நிராகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இத்தகையோர் திருந்தவும், மக்களின் ஆணைக்கமைவாக தொடர்ந்து அவர்தம் சேவைகளை முன்னெடுக்கவும் வழி பிறக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தில்தான், இந்தத் தேர்தலில் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்தால் அது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய இழப்பாக அமையாது என்ற எனது கருத்தை முன்வைத்திருந்தேன்.

இந்நிலையில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் இத்தேர்தலில் தோல்வியுற்றால் அவருக்கு எந்தவகையில் இழப்புக்கள் ஏற்படும்? அவர் பிறந்த காத்தான்குடி மண்ணுக்கு எந்தவிதமான இழப்புக்கள் ஏற்படும்? அவர் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தகைய இழப்புக்கள் ஏற்படும்? அவரது தோல்வியால் ஒட்டுமொத்த தேசியத்திற்கும் எவ்வாறான இழப்புக்களை அது கொண்டு வரும்? என்பது பற்றியெல்லாம் அடுத்துள்ள இரு வாரங்களுக்குள் நாம் பொறுப்புடன் அலசிப்பார்க்கலாம். (தொடரும்)

Published by

One response to “SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 05”

  1. SLMC kku Seat varathu. Kadaiyil than vanga vendum.

Leave a reply to mohdrislan Cancel reply