சாய்ந்தமருது: எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து ஓடி வந்த குதிரையை எமது மக்கள்
துரத்தியடித்ததைப்போல் இத்தேர்தலில் எமது கட்சியை மீண்டும் அழிக்க
வன்னியிலிருந்து பறந்து வந்திருக்கும் மயிலினையும் துரத்தியடிக்க
வேண்டும் என முன்னாள் பாhராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
தெரிவித்தார்.
சாய்ந்தமருது – 14ம் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையின்
ஏற்பாட்டில் மகளிர் தேர்தல் பிரச்சார கருத்ரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை
காலை (02) மௌலானா வீதியில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினரும்,
தொழிலதிபருமான ஹக்கீம் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்
முன்னாள் பாhராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக்
கட்சி வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபையின்
உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், தொழிலதிபர் பொறியியலாளர்
ஏ.எம்.ஹிபத்துல் கரீம், இலங்கை துறைமுக அதிகார சபையின் ஐக்கிய தேசியக்
கட்சியின் தொழிற் சங்கத் தலைவர் உதயனி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் ஏ.ஜலால், காரைதீவு பிரதேச சபையின்
முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும்
கலந்து கொண்டனர்.
இதில் பெருமளவில் தாய்மார்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இத்தேர்தலின் பிற்பாடு அமையப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் எமது
கட்சிக்கு பெரியதோர் கௌரவமும், அதிகாரமும் கிடைக்கவிருக்கின்றது. இதனூடாக
எமது கல்முனை மாநகர பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன்
மாமனிதர் அஷ்ரஃப்பின் கல்முனை புதிய நரக அபிவிருத்தித் திட்டமும்
அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே மக்கள் தங்களது வாக்குகளை இத்தேர்தலில் சிதறடிக்காமல் முஸ்லிம்
காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
மூவருக்கும் வாக்களிக்க வேண்டும்.
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாகி விடக்கூடாது எமது
மக்களின் நிலைமை. இதனை உணர்ந்து மக்கள் உதிரிக் கட்சிகளின் மாயைக்குள்
சிக்கிவிடாமல் எமது மக்களின் தேசிய மற்றம் சர்வதேச குரலான முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரங்களை இத்தேர்தலில்
பலப்படுத்த நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.
மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த எமது தேசிய இயக்கமான ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸை அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து வந்த குதிரையை எமது
மக்கள் துரத்தியடித்தார்கள்.
அதுபோல் இத்தேர்தலில் எமது தாய்மார்கள் நோன்பு நோற்று, துஆச் செய்து,
தகஜ்ஜத் தொழுது, இளைஞர்கள் இரத்த சிந்தி வளர்த்த எமது கட்சியை அழிக்க
வன்னியிலிருந்து பறந்து வந்திருக்கும் மயிலினையும் துரத்தியடிக்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


Leave a comment