வெள்ளத்தால் கழுவப்படும் மியன்மார்

myanmar floodநெய்பிடாவ்: மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, அந்நாட்டின் நான்கு பிரதேசங்களில் அந்நாட்டின் அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இந்த வெள்ளத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, மியான்மரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டில் உள்ள சின், மக்வே, சாகெய்ங், ரகின் ஆகிய நான்கு பிரதேசங்களில் அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். அங்கிருக்கும் மடாலயங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்தபோதும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் சில இடங்களில் தஞ்சமடைவது தடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குப் பகுதியில் இருக்கும் ரகின் மாகாணத்தில், சமூகக் கூடங்களிலும் கைவிடப்பட்ட பள்ளிக்கூடங்களிலும் ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்பியதாக தி மியான்மர் டைம்ஸ் தெரிவிக்கிறது.

ரகின் மாகாணத்தின் தலைநகர் சிட்வேவுக்கு அருகில் சுமார் 1,40,000 பேர் முகாம்களில் வசிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களாவர். கடந்த பல வாரங்களாகவே மியான்மரில் கடுமையான மழை பெய்துவருகிறது. இதுதவிர சமீபத்தில் அந்நாட்டில் வீசிய கோமென் புயலும் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

myanmar flood

மியான்மரில் இருக்கும் 14 மாகாணங்களில் ஒரு மாகாணத்தைத் தவிர, பிற மாகாணங்கள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மேற்குப் பகுதியில் இருக்கும் சின், ரகின் ஆகிய மாகாணங்களே மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக க்ளோபல் நியூ லைட் ஓஃப் மியான்மர் செய்தித்தாள் கூறியுள்ளது.ஐந்து லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் முன்னாள் தலைநகரான யாங்கூனும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.மியான்மருக்கு முன்பாக, வியட்நாமில் பெய்த கடும் மழையில் 17 பேர் பலியாகியிருந்தனர். மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில இந்தியப் பகுதிகளும் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Published by

Leave a comment