“பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்று சந்தித்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சர் றிசாத்”

harees haris– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: முன்னாள் அமைச்சர் பஷிலுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர் அமைச்சர் றிசாட், பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்று சந்தித்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாகும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கருத்தரங்கு நேற்று (29) புதன்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நஸார்தீன், எம்.ஹமீட், சாய்ந்தமருது விளையாட்டுக் கழக சம்மேளன பொருளாளர் ஏ.எல்.ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்னாள் அமைச்சர் பஷிலை மறைமுகமாக சிறைக்கு சென்று சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சர் றிசாடாகும்.

இச்சந்திப்பின் போது பஷிலினால் வழங்கப்பட்ட கொந்தராத்தே அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாட்டின் மயில் கட்சி தனித்து போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும்.

அவ்வாறு இல்லையென்றால் அமைச்சர் றிசாட் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் வந்து சத்தியம் செய்யட்டும் நான் முன்னாள் அமைச்சர் பஷிலை மறைமுகமாக சிறைக்கு சென்று சந்திக்கவில்லை என்று.

இந்த கொந்துராத்தை மிகக் கச்சிதமாக இன்று தனது பண பலத்தால் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றி செய்ய முற்பட்டுள்ளார். இதற்கு எமது முஸ்லிம் காங்கிரஸின் மூலம் எமது மக்கள் கொடுத்த அரசியல் முகவரியுடையவர்கள் சோரம் போய் உள்ளனர். இதனை எமது அம்பாறை மாவட்ட மக்கள் நிராகரிக்க வேண்டும்.

இத்தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த வேண்டும்.

மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியினை நாமே அழித்தோம். எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு நாம் வாக்களிக்காமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மீண்டும் மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியை கொண்டு வருவதற்கு நாமே காரணமாக அமைந்து விடக்கூடும்.

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் எம்மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியல் மயப்படுத்தியுள்ளார். இன்று தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக நாம் எமது தேசிய இயக்கமான முஸ்லிம் காங்கிரஸினை அழிப்பதற்கு இடம்கொடுக்க முடியாது.
எனவே எமது மக்களை இலகுவில் யாரும் ஏமாற்றிவிட முடியாது. எமது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எம்மக்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

அடுத்துவரும் பாராளுமன்றத்தில் எமது கட்சி வலுவான பேரம் பேசும் சக்தியினை பெறவுள்ளது. இதன் மூலம் எமது பிரதேசம் முழுவதும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகள் என பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே எமது ஒற்றுமையின் மூலம் இவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள எதிர்வருகின்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Published by

Leave a comment