காத்தான்குடி: வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்வதற்கான நேரங்களை ஒதுக்குவதில் காத்தான்குடி பொலிஸார் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டப்படுகின்றது.
இதுதொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வரும் காத்தான்குடியின் கிழம் ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக அதிகாரியிடம் இன்று (27) காலை தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தார்.
நேற்று (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி மற்றும் சிறி.ல.மு.கா என்ற மூன்று பிரதான அரசியற் கட்சிகளினது தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் ஐ.தே.க மற்றும் சிறி.ல.மு.கா ஆகிய கட்சிகளின் கூட்டங்கள் இரவு 10:30 மணியுடன் காத்தான்குடிப் பொலீசாரின் நேர வரையறைக்கமைவாக நிறுத்தப்பட்ட போதிலும், நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மாத்திரம் இரவு 11:15 மணியையும் தாண்டி நடைபெற்றதாக புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இரவு 10:30 மணியைக் கடந்த பின்னரும் பிரதேசத்தில் ஒலிபெருக்கிச் சத்தம் ஓங்கியொலிப்பதனால் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவ மாணவிகளும், வீடுகளில் இருதய மற்றும் மார்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலீசார் முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தபோது நடாத்தப்பட்ட தேர்தல்களின்போது ஆளுந்தரப்பினருக்கு பக்கச் சார்பாக செயற்பட்டது போன்றே தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஐ.ம.சு.கூட்டணிக்கும், நாட்டிற்கும் தலைவராகிய பின்னரும் பாரபட்சமாகச் செயற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகப் பாடுபட்டுவரும் தங்களின் நிறுவனம் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் போன்றோருடன் தொடர்பு கொண்டு கட்சிகளுக்கிடையில் பாரபட்சம் காட்டாது நேரத்தை மட்டுப்படுத்தி பிரதேசத்தின் அமைதி மற்றும் மணவர்கள், நோயாளிகளின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுவதற்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவசரமாக அறிவுறுத்துமாறும் புவி. றஹ்மதுழ்ழாஹ் தனது முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published by

Leave a comment