“முஸ்லிம் காங்கிரஸூடனான கூட்டு இணைவில் நல்லாட்சிக்கான எமது அடிப்படை கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புகளுமில்லை”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

rahuman[1]– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

ஏறாவூர்: “எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளின் கூட்டிணைவிற்காக, எமது நல்லாட்சிக்கான அடிப்படைக்கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை. மாறாக அது நல்லாட்சியை முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சியே இதுவாகும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச் சின்னத்தில், 2ம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் இளைஞர்களுடனான சந்திப்பு நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த நாட்டில் நல்லாட்சி என்ற கொள்கையின் அடிபடையில் கடந்த பத்து வருடங்களாக அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் எமது கொள்கையில் உறுதியாக இருந்து அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணியுனும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்களக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடான கொள்கைகளை கொண்ட கட்சிகளுடன கூட்டு உடன் படிக்கைகள் மூலம் இணைந்து தனது நல்லாட்சிக்கான உழைப்பபை முன்னின்று செய்தது. இதனால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மீது இந்த நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது.

தற்பொழுது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக பல கட்சிகள் இணைந்து நல்லாட்சிக்கான உழைப்பை மேற்கொள்கின்றன. அதில் ஒரு அங்கமாகவே முஸ்லிம் காங்கிரசுடனான எமது கூட்டணியும் அமைந்துள்ளது.

நாங்கள் இவ்வாறான கூட்டணிகள் ஏதுமின்றி தனியாக அரசியலில் பயணித்துக்கொண்டிருந்த பொழுதே பல வருடங்களுக்கு முன்னரே மக்கள் மத்தியில் பின்வரும் விடயத்தினை தெளிவாக முன்வைத்திருந்தோம். அதாவது, ‘அரசியல் என்பது செம்மையான நேர் கோட்டுப்பாதை கிடையாது. கூட்டணிகளும் ஒப்பந்தங்களும் அணிசேர்வுகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் அந்த ஒவ்வொரு கூட்டணிகளும், ஒப்பந்தங்களும் அணி சேர்வுகளும், நமது லட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்துவதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அது சரியான பாதையாகும். இலட்சியத்தை விட்டும் நம்மை பின்னகர்த்துவதாக இருந்தால் அது பிழையான பாதையாகும்’.

அந்த வகையில் எமது அடிப்படைக்கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது சமூக நலன் அடிப்படையிலான இந்தக்கூட்டணியை ஒரு பொது இலட்சியத்திற்காக நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். கடந்த ஜனவரி மாதம் மக்கள் வழங்கிய ஆணை எவ்வாறான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டதோ, அதனை தக்க வைத்து மேலும் வலுப்படுத்தற்கான ஒரு உறுதியான பாராளுமன்றத்தினை அஅமைப்பதே அந்த பொது இலட்சியாமாகும்.

இங்கு முஸ்லிம் காங்கிரஸில் நாம் இணையவில்லை. எங்களுடைய கட்சியில் அவர்கள் இணையவுமில்லை.இரண்டு கட்சிகளும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட இரண்டு நிறுவனங்களாகும். இரண்டும் ஒரு பொது நோக்கத்தில் இணைந்துள்ளன. இது நாம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் மிக தெளிவாக பிரதிபலிக்கிறது.”

Published by

Leave a comment