மதி நுட்பமும் ஆக்கத்திறனும் கற்றவர்களுக்கு மட்டும் உரியவையல்ல!

inamullah– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

மதிநுட்பம் (Intelligence),அறிவு (knowledge),ஆற்றல் (talent) போன்ற பண்புகள் பிறப்பிலேயே பலருக்கும் பல்வேறு தராதரங்களில், துறைகளில் எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்றது.

கல்வி (Education) என்பது ஆரம்பக் கல்வியின் பொழுது பொதுமைப்படுத்தப் பட்ட சகல துறை ஆறிவு ஆற்றல்களின் திறன் விருத்தியின் இலக்குகளை மையப்படுத்தி புதிய தலை முறைகளை நெறிப்படுத்துகின்ற சேவையாக இருக்கின்றது.

உயர் கல்வியின் பொழுது குறிப்பிட்டதொரு துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இளம் தலைமுறையினக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

பெரும்பாலும் சான்றிதல்களை மையப்படுத்திய கல்வித் திட்டங்கள் நிலவுகின்ற வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களுக்காக திறமையானவர்கள் உள்வாங்கப் படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

தொழில் வழங்குவோருக்கும், தொழில் தேடுவோருக்கும் சான்றிதல்கள் அத்தியாவசியமானவை, நவீன வாழ்வியல் ஒழுங்குகள் குறிப்பாக மேலைத்தேய கல்விக் கட்டமைப்புக்களை, ஆங்கில எழுத்துக்களை அடையாளக் குறிப்பாக கொண்டுள்ள சான்றிதல்களை மையப்படுத்தியிருப்பதனை நாம் அறிவோம்.

என்றாலும, கற்றல், கற்பித்தலில் உள்ள நுட்பங்கள், பரீட்சைகளில் உள்ள ஒவ்வாமைகள், மனனமிடல், சமர்பித்தலில் இருக்கின்ற வேக விவேகங்கள் அல்லது பொதுமைப்படுத்தப் பட்ட சகலதுறை பாடவிதானங்களில் ஆர்வமின்மை என்பதனாலும் சிலவேளைகளில் கல்வித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளால் பலர் கல்வி வாழ்க்கையை ஆரம்பக் கல்வியின் பொழுதும், உயர கல்வியின் பொழுதும் இடை நிறுத்தி விடுகின்றனர்.

அதேபோன்றே ஆரம்பக் கல்வியில், சாதாரண தரத்தில் அதி உயர்சிறப்புப் பெறுபேறுகளை பெறுகின்ற பலர், இரண்டாம் நிலைக் கல்வியில், உயர் தரத்தில் தமக்கு ஒவ்வாத ஒரு துறையில் காலத்தைக் கடத்தி விரக்தி நிலைக்குச் சென்று விடுகின்ற அல்லது மட்டுப் படுத்தப்பட்ட உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்து தவிக்கின்ற நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன.

இன்னும் சிலரோ இருக்கின்ற பாடவிதானங்களில் இலகுவான துறையை தெரிவு செய்து ஏதோ இரண்டு ஆங்கில குறியீடுகளைக் கொண்ட சான்றிதழை பெற்றுக் கொள்ள முடிவு செய்து விடுகின்றனர், தமது திறமைகளுக்கும், ஆற்றல்களுக்கும், சந்தையில் நிலவுகின்ற தேவைப்பாடுகளுக்கும் தொடர்பில்லாத சான்றிதல்களை காவிக் கொண்டு வேலையில்லா பட்டதாரிகளாக திருமண வயதில் (23-24) அல்லலுறுகின்றனர்.

உண்மையில் இவ்வாறு கல்வியை இடை நிறுத்துபவர்கள், மதிநுட்பம் குறைந்தவர்களோ, அறிவு மற்றும் திறன்கள் இல்லாதவர்களோ அல்ல, அவர்களுக்கு என்று ஒரு துறை கட்டாயம் இருக்கும், கடந்த காலங்களில் அவ்வாறானவர்களே மிகப் பெரிய வெற்றிகரமான, தொழில் முயற்சியாளர்களாக தொழில் அதிபர்களாக, தொழில் வழங்குனர்களாக சொந்த உழைப்பினால், அனுபவத்தினால் உயர்ந்திருக்கின்றார்கள், அவர்கள் மேற்கொண்ட, விவசாய, வர்த்தக நுட்பங்களை கற்பதற்கே இன்று கற்கைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

உதாரணத்திற்காக, வறுமையின் பிடியில் சிக்கி 6 ஆம் வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு, கற்களை தலையில் சுமந்து கூலித் தொழிலாளியாக இருந்த ஒரு சிறுவன், காலையில் தாயார் திரிக்கும் கையிற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்ற ஒரு சிறுவன், தயார் விற்பனைக்கு தயாரிக்கும் அப்பங்களை அம்மிக் கல்லில் மிகுதியாகவுள்ள மிளகாய் விழுதில் தொட்டுச் சாப்பிட்ட ஒரு சிறுவன், இலங்கையில் முன்னணி மாணிக்கக் கல் வர்த்தகராக மாறி 1970 களில் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியின் பொழுது கைகொடுக்கின்றார்.

இன்று இலங்கையில் பிரபலமான இஸ்லாமியக் கல்லூரியை நிறுவி இதனை எழுதிக் கொண்டிருக்கும் அடியேன் உற்பட இந்த நாட்டில் பல் வேறு துறைகளிலும் தலை சிறந்த கல்விமான்களை, அதிபர்களை, ஆசிரியர்களை, சிந்தனையாளர்களை உருவாக்கிய அந்த மா மேதை வேறு யாருமல்ல அல்-ஹாஜ் நளீம் (ரஹ்) அவர்கள் தான். இன்று அவர்கள் மேற்கொண்ட மாணிக்கக் கல் வர்த்தகம் பேருவளை சீனன்கோட்டை, இரத்தினபுரி , அபிரிக்க ஆசிய நாடுகள் என அவர்களது வாரிசுகளை வெற்றிகரமான வர்த்தகர்களாக மாற்றிவிட்டிருக்கின்றது, (Gemology) எனும் கற்கையை நாங்கள் கற்கின்றோம்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டின் பொருளாதார சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப நிபுணர்களை, தொழிலாளர்களை கல்வித் திட்டங்களினூடாக உருவாக்குகின்றனர், உதாரணமாக குறிப்பிட்ட நாடுகளில் உள்ள விவசாயப் பொருளாதாரம், உற்பத்தித் தொழிற் துறைப் பொருளாதராம், தொழில் நுட்பம், உயர் தொழில் நுட்பம், திறந்த பொருளாதாரம், பங்குச் சந்தைப் பொருளாதாரம் என பல்நூறு சந்தை வாய்ப்புக்களைக் கொண்ட சான்றிதல்களுக்கான கற்கைகளை காலத்திற்கும் , சூழ்நிளைகளுக்குமேற்ப வடிவமைத்து வழங்குகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை இந்த நாட்டின் விவசாய தொழில்துறை சார்பான கற்கைகள், உணவு உற்பத்தி, பதப்படுத்தல், சந்தைப் படுத்தல், ஏற்றுமதி செய்தல், விவசாய தொழில் நுட்பங்கள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், நீர் வளத்தில் உச்ச பயன் பெறுதல், கால்நடை வளர்ப்பு, கடல் வளம், மீபிடி போன்ற துறைகளுக்கான நவீன தொழில் நுட்பக்ககல்விகளை இனம் காணுதல், கிராமியக் கைத் தொழில்களை மையப்படுத்திய தொழிற் கல்விகள் போன்ற துறைகளில் அரசு உரிய கவனம் செலுத்துமெனில் மத்திய கிழக்கிற்கு செல்லும் வீட்டுப் பணியாளர்களுக்கும் அவர்கள் உழைக்கும் வெளிநாட்டுச் செலாவனிக்கும் மாற்றீடுகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இன்ஷா அல்லாஹ்

தொடரும்..

Published by

Leave a comment