மட்டக்களப்பு: தேர்தல் களம் சூடு பிடித்து வரும் இந்நாளில் கட்சி மாறிகளும் முடிச்சு மாறிகள் போல் இரவோடிரவாக பல்வேறு தரப்பு அரசியல் தலைகளுடனும் இரகசியச் சந்திப்புக்களை மேற்கொண்டு, பேரம் பேசல்களை நடாத்தி கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் மூத்த கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்ததாக ஊடகங்களில் டமாரம் அடித்து வரும் முன்னாள் தமிழ் ஆயுதப் போராட்டக் குழுவின் அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல்ஞானியான தவிசாளர் ஒருவர், வேட்பாளர் தெரிவில் இடம்பெற்ற தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தப் போவதாக சமீபத்தில் ‘பெருநாள் ஸ்பெஷல் வெடில்’ ஒன்றைக் கொழுத்தி ஊடகங்களில் வீசியிருந்தார்.
எனினும் இதுவரை அவர் திருவாய் மலர்ந்து எந்தவிதமான தில்லுமுல்லுகளையும் வெளியாக்கவில்லை. அவரது தில்லுமுல்லுகள் அவரது சொந்தக் கப்பலில் ஏற்றுமளவுக்கு அதிகளவில் இருக்க, தோணியில் ஏற்றுமளவுக்கு அவரிடமுள்ள தில்லுமுல்லுகள் முஸ்லிம் சமூகத்தில் எந்த முலைக்குள் அடங்கும்? என்ற மக்களின் கேள்விகள் ஒருபுறமிருக்க…
இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த தவிசாளர் காத்தான்குடிக்கு பின்னிரவில் வந்து, அவருக்கு நெருக்கமான முன்னாள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினருடன் (அவரது பெயரும் முன்னாள் மு.கா. தவிசாளர் ஒருவரின் பெயரை நெருங்கியது) மோட்டார் சைக்கிளில் சென்று சக மகிந்த விசுவாசியும், தற்போதைய மைத்திரி பார்ட்டி வேட்பாளருமான ஈச்சை மர மண்ணின் மைந்தனைச் சந்தித்து பேச்சுவார்ததைகளை மேற்கொண்டதாக எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியொன்று கூவியுள்ளது.
குறித்த எஸ்.எம்.எஸ். செய்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரது பெயர்களும், சந்தித்த மண்ணின் மைந்தனின் பெயரும் அச்சொட்டாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டு 48 மணித்தியாலங்கள் கழிந்திருந்தும் அச்செய்திக்கு எதிராக நடவடிக்கைகiளோ அல்லது மறுப்போ இவர்கள் தெரிவிக்காமல் இருப்பது, இந்தப் பரம இரகசிய சந்திப்பை மட்டு. மாவட்ட மு.கா. ஆதரவாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைந்துள்ளது.
மட்டு. தேர்தல் களத்தில் குறித்த தவிசாளருக்கு இடமளிக்க வேண்டாம் என மாஜி. மாநகரப் போராளி முதல் கட்சியின் தேசிய கொ.ப. வரை சமீபகாலமாக ஊடகங்களில் ஒப்பாரி வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் இவ்விடத்தில் கவனிப்புக்குரியது.
இதேவேளை, ஏறாவூரில் மௌலானா மீண்டும் மு.கா.வினூடாக நாடாளுமன்ற மட்டத்திற்கு உயர்வது, தனது அரசியல் இருப்புக்கு ஆப்பாகும் என்பதனால்தான் இவ்வாறான பெருநாள் வெடிகுண்டுகள் மு.கா. தலைமையை நோக்கி எறியப்படுவதாகவும், இதற்கு சைட் சப்போர்ட்டாக ஏறாவூரிலிருந்து ஒரு பாவா மாத்திரம் மு.கா.வின் மீது அதிருப்தி தெரிவித்து சின்னதொரு அறிக்கை விட்டிருப்பதாகவும் ஏறாவூர் வட்டாரம் கூறுகிறது.
ஆக, இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து, பெருக்கிப் பிரித்துப் பார்க்கும்போது தவிசாளர் மிக விரைவில் வேலி தாண்டி வெற்றிலை மேடையில் காட்சியளித்து புதிய வெற்றி வியூகத்தைக் கட்விழ்த்து விடப்போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
Published by


Leave a reply to mohdrislan Cancel reply