கொழும்பு: கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் ரசிகர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.
இந்த கைகலப்பில் காயமடைந்த ஆண் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபில்கள் நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மோதலினால் மைதானத்தின் சில மின்குமிழ்களும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இரவு பகலாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 வது விக்கெட்டை இழந்த போது இருதரப்பு ரசிகர்களிடையெ ஏற்பட்ட கைகலப்பினால் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் இரவு சுமார் 8 மணியளவில் நடைபெற்றது.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அணி 34 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது மைதானத்துக்குள் பாகிஸ்தான் வீரர் அருகே கல் ஒன்று விழுந்தது.
இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மைதானத்தின் வெளியே இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனால் பீதியடைந்த ரசிகர்கள் அங்கும், இங்கும் ஓடினார்கள். திடீ ரென ரசிகர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது.
மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் கூச்சல்- குழப்ப மாக இருந்தது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் அறைக்கு உடனே திரும்பினார்கள்.
இதையடுத்து கலவர தடுப்பு சிறப்பு பிரிவு படையினர் வர வழைக்கப்பட்டனர். துப்பாக்கியுடன் வந்த அவர்கள் ரசிகர்க ளை கட்டுப்படுத்தினர். வெளியில் நின்ற ரசிகர்களை அப் புறப்படுத்தினர். நிலைமை கட்டுக்குள் வந்தபிறகு போட்டி மீண் டும் நடத்தப்பட்டது. ரசிகர்கள் ரகளையால் போட்டி அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கற்கள் வீசப்பட்டத்தில் பல மோட்டார் சைக்கிள், கார்கள் சேதம் அடைந்தது. போட்டி முடியும் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.
இந்த சமபவம் குறித்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் தலைவர்; மிஸ்பா-உல்-ஹக், முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளனர். அதில், ஒரு சில ரசிகர்கள் செய்த தவறால் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.
மைதானத்தின் மேல் ஆசன வரிசையில் இருந்தவர்களும் கீழ் ஆசன வரிசைகளில் இருந்தவர்களும் போத்தல்களாலும் பொல்லுகளாலும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனைத் தொடர்ந்து கெத்தாராம, மாளிகாவத்தை பிரதேசங்களிலும் நேற்று இரவு சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.
Published by


Leave a comment