தனது உண்மையான பெயரை உறுதிப்படுத்தினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

Shibly– புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ்

காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது உண்மையான பெயர் முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, இவர் தனது பெயரை ‘அப்துல் பாறூக் மொஹமட் ஷிப்லி’ என வேட்புமனுவில் உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அந்தப் பெயரின் அகர வரிசை அடிப்படையில் தேர்தல் திணைக்களம் அவருக்கான விருப்பு இலக்கத்தை அப்போது வழங்கியிருந்தது.

அந்த விருப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் அவரும், அவரது கட்சியான அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.கா. கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்ததனால் அவர் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு உறுப்பினராகத் தெரிவானார்.

அவரது பெயர் மோசடிச் செயற்பாடு குறித்து ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் அது குறித்து எத்தகைய பதிலும் அளிக்காமல் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக மௌனமே காத்து வந்தார். இந்நிலையிலேயே கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு.கா. வேட்புமனுவில் அவர் தனது பெயரை ‘முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி’ எனக் குறிப்பிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அவரது உண்மையான பெயர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தனக்கு விருப்பமான முன்னணி விருப்பு இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளும் உள்நோக்குடன் மோசடியான வகையில் தேர்தல் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த பெயரில் இவர் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எனும் பதவியானது சட்டரீதியாகச் செல்லுபடியாகுமா? என்பது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை பெற்று வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment