மட்டக்களப்பு: பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ள (13) இன்றைய தினத்தில், மின்கம்பங்களிலும், பொது இடங்களிலும் இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு மட்டக்களப்பு நகரத்திலும், அதையண்மித்த பிரதேசங்களிலும் ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சுவரொட்டிகள் சரமாரியாக ஒட்டப்பட்டிருந்தன.
இவற்றில் பெரும்பாலனவை இன்று நண்பகலுக்கு முன்னதாகவே அகற்றப்பட்டுள்ளன. எனினும் அரசடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் இன்று மாலை வரையும் இச்சுவரொட்டிகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.
தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலீசார் தமது பணிகளை செவ்வனே தொடர்வார்கள் என்றும் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பாக மக்கள் மத்தியில் நன்கு பிரபல்யமான அரசியல்வாதிகளே இம்முறையும் பெரும்பாலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இவ்வளவு பணத்தைச் செலவிட்டு போஸ்டர்கள் அடித்து எங்களுக்கு அவர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா? இவ்வாறு செலவு செய்யப்படும் பணத்தை ஏழைகளின் துயர் துடைக்கச் செலவிட்டால் அவர்களின் வாக்குகளாவது இவர்களுக்குக் கிடைக்குமே என்றும் மக்கள் விசனத்துடன் ஆதங்கப்படுகின்றனர்.



Leave a comment