மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற வேட்புமனுத் தாக்கல் முழுவிபரம்

This slideshow requires JavaScript.

– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 13 இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈரோஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும் வருகைதந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹீர் மௌலானா தலைமையில் வந்த வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்புமனுவை அதன் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகைய்யா இராசமாணிக்கம் தலைமையில் வேட்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா ஆகியோர் வருகை தந்து தாக்கல் செய்தனர்.

மேற்படி பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் 16ம் சுயேட்சைக்குழுக்கள் 30ம் தங்களது வேட்புமனுக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Published by

Leave a comment