மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம், எதிர்வரும் 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு, மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்கா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சங்கத் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் நடைபெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ. பத்மசிறி தெரிவித்தார்.
இதுவரை காலமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஆரையம்பதி செல்வா நகர் கிராமத்தில், சங்கச் செயலாளரது வதிவிடத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த இச்சங்கத்திற்கான புதிய அலுவலகம் மட்டக்களப்பு மாநகரில் மஹாத்மா காந்தி பூங்காவுக்கு எதிரில் அமையப்பெற்றுள்ள போதிலும் அது இன்னமும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவில்லை.
சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இம்மாவட்ட அலுவலக நிர்மான நடவடிக்கைகளை நிர்வாக சபை அங்கத்தவர்கள் அவதானிப்பதுடன், அதன் திறப்பு விழா தொடர்பான விடயங்களையும், ஏனைய விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் வகையில் நிர்வாக சபைக் கூட்டம் புதிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சகல நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Published by



Leave a comment