யாழ்ப்பாணம்: ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற சுவாரஷிய சம்பவங்கள் பலவும் தற்போது வெளியில் வந்த வண்ணம் உள்ளன. 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலம். ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களை புலிகள் படுகொலை செய்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண நடவடிக்கை அணியின் பொறுப்பாளர்களில் ஒருவராக மலரவன் என்பவர் விளங்கினார். இவர் ஒரு புலனாய்வுப் போராளியும் ஆவார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை படுகொலை செய்கின்ற கடமை இவருக்கு வழங்கப்பட்டது.
இப்பிரமுகர் குறித்த தகவல்களை சேகரித்தார் மலரவன். பின்பு ஒரு நாள் இப்பிரமுகரின் வீட்டுக்கும் நேரில் சென்றார். முதலில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இப்பிரமுகருடன் நீண்ட நேரம் உரையாடினார்.
உரையாடல் நிறைவு பெறுகின்ற பட்சத்தில் அடையாளத்தை வெளிப்படுத்திய மலரவன் வரவின் நோக்கத்தையும் வெளிப்படையாகவே சொன்னார்.
ஆயினும் இப்பிரமுகரின் சுய நலம் அற்ற மக்கள் சேவை, நேர்மை, விடா முயற்சி, அர்ப்பணிப்பு, அரசியல் வேலை ஆகியவற்றால் கவரப்பட்டு விட்டார் என்று தெரிவித்த மலரவன் புலிகள் இயக்கத்தில் இணையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் இப்பிரமுகர் மறுத்து விட்டார்.
யோசித்து சொல்லுங்கள்.. என்று விடை பெற்றுச் சென்ற மலரவன் இதற்கு பின்பும் ஓரிரு சந்தர்ப்பங்களில் இப்பிரமுகரை சந்திக்க நேர்ந்தது. இயக்கத்தில் சேருங்கள் என்று அப்போதெல்லாம் மலரவன் கோரினாரே ஒழிய துப்பாக்கியை இயக்கவே இல்லை.
இப்பிரமுகரின் பெயர் பசுபதி சீவரத்தினம் என்பதாகும். ஆயினும் கி. பி என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். கிராமத்து பிள்ளை என்பதே கி. பி என்பதன் விரிவாக்கம் ஆகும். இவர் கிராமங்கள் தோறும் சென்று மக்கள் நலன் சார்ந்த வேலைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றமையால் மக்கள் இவருக்கு வழங்கிய பட்டமே இது. இவர் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றார்.
இவரின் ஒரு கண்ணாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவையும், மற்றைய கண்ணாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையும் கொண்டிருக்கின்றார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளராக விளங்கினார். இப்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்குகின்றார். இவர் முதலாவது வடக்கு – கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்தவர்.
பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்திகள் முயற்சிகள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா விளங்கியபோது பசுபதி சீவரத்தினத்தை பனை அபிவிருத்தி சபைத் தலைவராக நியமித்தார். பனை அபிவிருத்திச் சபை வரலாற்றிலேயே பசுபதி சீவரத்தினம் தலைவராக பதவி வகித்த காலம் பொற்காலம் என்று அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இவர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
மின்னஞ்சல்: தாய்நாடு
Published by


Leave a comment