காத்தான்குடி: எதிர்வரும் ஆகஸ்ட் 17இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஶ்ரீ. ல.மு.கா.வில் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களும் ஒரு வேட்பாளாராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2012இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர் அ.இ.ம.கா. சார்பில் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி எனும் பெயரிலேயே போட்டியிட்டு ஒரு உறுப்பினராகத் தெரிவாகிய போதிலும் இவரது உண்மையான பெயர் முகம்மது பாறூக் மொகமட் ஷிப்லி என்பதேயாகும்.
விருப்பு இலக்கத்தில் முன்னுரிமை பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பிழையான வழிகாட்டலுக்கு உடன்பட்டு இவர் தனது சொந்தத் தகப்பனின் பெயரையே மாற்றிக் கொண்டு மோசடியாகப் போட்டியிட்டார் என்பதை நான் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
இப்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பவற்றை யாப்பாகக் கொண்டு இயங்குவதாகக் கூறும் ஶ்ரீ.ல.மு.கா. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரையும் ஒரு வேட்பாளராகக் களமிறக்கவுள்ளதாக பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஶ்ரீ.ல.மு.கா.வும்; விருப்பு இலக்கத்தில் இவர் முன்னுரிமை பெறுவதற்காக அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி என்று இவரை பொய்யான பெயரில் மோசடியாகக் களமிறக்குமா? அல்லது அவரது உண்மையான பெயரில் முகம்மது பாறூக் மொகமட் ஷிப்லி என்றே களமிறக்குமா? என மட்டு. மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் பரவலாக வினாவெழுப்பி வருகின்றனர்.


Leave a comment