காத்தான்குடி: காத்தான்குடி அருங்காட்சியகத்திலுள்ள சர்ச்சைக்குரிய உருவச்சிலைகள் மற்றும் பொம்மைகளை அகற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் மற்றும் பொம்மைகளுக்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறும் ஜம்மியத்துல் உலமா சபையினால் அருங்காட்சியக நிர்வாகத்திற்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மியத்துல் உலமா சபையின் இந்த மார்க ரீதியான தீர்ப்பையடுத்து அருங்காட்சியகம் இன்று திங்கட்கிழமை தொடக்கம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்திலுள்ள உருவச்சிலைகளையும் பொம்மைகளையும் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதியுடன் அகற்றுவதற்காகவே அருங்காட்சியகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகத்தை அடையாளப்படுத்தும் வகையில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் உதவியுடன் இந்த அருங்காட்சியகம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் காணப்படும் மனித உருவச் சிலைகளும் பொம்மைகளும் மார்க்க ரீதியான சர்ச்சைகளை உள்ளுர் முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியிருந்தது.
உள்ளூர் உலமா சபை அந்த உருவச் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும் நகரசபை நிர்வாகமதை நிராகரித்திருந்தது.
எனினும் அகில இலங்கை உலமா சபை நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர் தீர்ப்பு வழங்க வேண்டும் என நகர சபை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து அகில இலங்கை உலமா சபையின் பத்வா குழு அருங்காட்சியகத்தை நேரடியாக பார்வையிட்ட பின்பு மார்க்க ரீதியான இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது என அந்த அருங்காட்சியகம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்த முன்னாள் அமைச்சரான ஹிஸ்புல்லா கூறுகிறார்.
உலமா சபையின் தீர்ப்பை தான் மதித்து நடப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் இதனை தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமையகத்தின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.




Leave a comment