துபாய்: துபாயில் உள்ள இலங்கை முஸ்லிம்களின் அமைப்பும் இலங்கைப் பிரதித் தூதுவராலயமும் இணைந்து கடந்த வியாழன் (2015.07.02) அன்று இப்தார் நிகழ்வு ஒன்றினை இலங்கை தூதுவராலாயத்தில் ஏற்பாடு செய்து இருந்தது.
துபாய் வாழ் மாற்று மத இலங்கையர்கள் பலரும் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வில் பௌத்த மத குருக்கள் , கிறிஸ்த்தவ பாதிரியார் மற்றும் ஹிந்து மத குருவும் விஷேட விருந்தினர்களாக பங்கேற்றதோடு நாட்டுக்கும் இலங்கை மக்களுக்கும் இப்புனித ரமளான் மாதத்தில் விஷேட பிரார்த்தனைகளையும் ஆசிகளையும் வழங்கினர் .
துபாயில் உள்ள இலங்கை பிரதித்தூதுவர் எம்.எம். அப்துல் றஹீம் உரையாற்றுகையில் பல்இன இலங்கையர்களும் பங்கு கொள்ளும் இந் நிகழ்வானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு முன் மாதிரியான ஏற்பாடு என்பதுடன் இவ்வாறான அனைத்து மதத்தினர் பங்கு பற்றும் இப்தார் நிகழ்வானது இலங்கையர் அனைவருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி சகலரும் வேற்று மதங்களை மதித்து ஒரே தேசக்கொடியின் கீழ் இலங்கையர்களாக வாழ வழி வகுக்கும் என்று எடுத்துரைத்தார் .
சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வேற்று மதத்தினரையும் , அவர்களது உணர்வுகளை மதிக்கும் வகையிலும் மாமிச இறைச்சி உணவு வகைகளுக்கு பதிலாக மரக்கறி உணவு வகைகளே இவ் இப்தாரில் பரிமாறப்பட்டது.
இந்த மாற்றத்தினை பௌத்த இந்து மக்கள் பெரிதும் வரவேற்றதோடு தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
பிரதித்தூதுவர் அப்துல் றஹீமின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2015 இல் முடிவடையும் நிலையில் அவர் துபாய் வாழ் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஆற்றிய சேவைகளை பாராட்டி ஏற்பாட்டாளர்கள் கேடயம் ஒன்றினை வழங்கி அவரை கௌரவித்தனர்.
Published by



Leave a comment