காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூட்டு ஸக்காத் வேலைத்திட்டம் இம்முறையும் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ. மஜீத் காத்தான்குடியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.
2002 தொடக்கம் 2014 வரை மிக சிறப்பாக இடம்பெறும் இச்செயற்பாடானது இம்முறை இதை மேலும் வடிவமைத்து சென்ற காலங்களை விட கூடுதலான தொகையை ஸக்காத் வழங்குபவர்களிடம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேகரித்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர், இதற்கான பூரண ஒத்தழைப்பினையும் ஆதரவினையும் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இம்முறை ஸக்காத்தினை வசூலிக்க வெளிநாட்டு சகோதரர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கட்டார், டுபாய், லண்டன், போன்ற நாடுகளுக்கு இவர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் எமது ஊர் சகோதரர்கள் ஸக்காத் பங்களிப்பான 2.5 வீதத்தினை கொடுத்து உதவி புரியுமாறும், இந்த திட்டம் மேலும் வளர்ச்சியடைந்து வறுமையான குடும்பங்களுக்கான கடன் பழு, வீடு கட்ட, தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், இஸ்லாத்தினை ஏற்ற மக்களுக்கு உதவவும் இது பயன்படுவதோடு அல்லாஹ் கூறிய ஸக்காத்தினை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கமும் வெள்ளியும் அவர்களுக்கு பழுக்க காய்ச்சி மறுமையில் ஒத்தடமாக வழங்கப்படும் என கூறியுள்ளான் என அல் குர்ஆன் கூறுகிறது எனத்தெரிவித்தார்.
அத்துடன் சம்மேளனம் தற்போது வறிய மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் வீடு இல்லாத பிரச்சினைக்கு வீட்டுத்திட்டங்களை செய்து வருவதாகவும் இது அவர்களுக்கான நிரந்தர இருப்பிடமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இதற்கான தங்களால் வழங்கப்படும் ஸக்காத் நிதியினை வழங்குமாறு வேண்டி நிற்பதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவிக்கிறது.
இதன் அடிப்படையில் கட்டார் நாட்டுக்கான வசூலிப்பு நடவடிக்கைகளுக்கு எம்.ஐ. அப்துல் முபீன், டுபாய் நாட்டுக்கு பொறுப்பாக மௌலவி எம்.ஐ. காலிதீன், சவுதி அரேபியாவுக்கு பொறுப்பாக எம்.சி.எம் நபீல், ஐக்கிய ராச்சியம் (UK) நாட்டுக்கு பொறுப்பாக ஏ.சி.எம் முபஸ்ஸிர் ஆகியோர் சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் கணிசமான ஸக்காத் தொகையினை வழங்கமாறும் இதன்போது தெரிவித்தனர்.
Published by



Leave a comment