ஜிஹாத்தும் தற்கொலைத் தாக்குதல்களும்

afghanistan– முஹம்மது நியாஸ்

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் இறைவனால் ஏவப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வழிகாட்டப்பட்ட எந்தவொரு நற்செயலை நாம் எடுத்துக்கொண்டாலும் அந்த நற்செயலை செயற்படுத்துவதற்காக நாம் பிரயோகிக்கின்ற வழிமுறைகளும் செயற்பாடுகளும் நேர்வழியிலும் அழ்ழாஹ் அனுமதித்த, அங்கீகரித்ததன் பிரகாரமும் இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாகும்.

உதாரணமாக பசியோடிருக்கின்ற ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது. ஏழைகளின் பசியை நீக்குவதற்குப் பாடுபடும் எவருக்கும் அழ்ழாஹ் இம்மையிலும் மறுமையிலும் பல சிறப்புக்களை வழங்கி கௌரவிப்பான் என்பது அல் குர்ஆனின் உத்தரவாதம். அவ்வாறு பசியோடிருப்பவருக்கு உணவளிக்கின்ற நாங்கள் அந்த உணவை நம்முடைய சுய சம்பாத்தியத்திலிருந்து, அழ்ழாஹ் அனுமதித்த வழிகளில் இருந்தே வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர் வீட்டில் திருடிய சொத்திலிருந்து செலவழிக்கக்கூடாது.

வட்டி போன்ற இஸ்லாம் தடுத்த வழிவாசல்களின் வாயிலாகப் பெறப்படுகின்ற பொருளாதாரத்தை இந்த நற்செயலுக்குப் பயன்படுத்தக்கூடாது.

இதுவே நல்லறங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்துகின்ற நம்முடைய வழிமுறைகள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதற்கு இஸ்லாம் காட்டித்தந்த முன்மாதிரியும் உத்தரவுமாகும்.

afghanistan

இந்த நிபந்தனைகளை மனதில் இருத்திக்கொண்டு இப்போது சர்வதேச உலகெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்ற தற்கொலைத்தாக்குதல்கள் தொடர்பில் இஸ்லாமிய மார்க்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் என்னவென்பது குறித்து நோக்குவோம்.

தற்கொலைகள் தொடர்பில் இஸ்லாம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரொருவருக்கும் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்திநிலையாக இருக்கலாம், கடன் தொல்லை, காதல் தோல்வி, பரீட்சையில் சித்தியடையாமை, மானபங்கப்படுத்தப்பட்டமை போன்ற எந்தவொரு காரணத்திற்காகவும் ஆணோ, பெண்ணோ தன்னுடைய உயிரை தானே போக்கிக்கொள்வதை இஸ்லாம் கண்டிப்பாகவே தடைசெய்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. அதன் வலியை தாங்கமுடியாது அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அழ்ழாஹ் எனது அடியான் மரணத்தில் அவசரப்பட்டுக்கொண்டான் என்பதற்காக அவனுக்கு சுவர்க்கத்தை ஹராமானதாக்கிவிட்டான். (ஸஹீஹுல் புஹாரி. 1364)

afghan

இன்னும் அதேபோன்று,
யார் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக்கொண்டே இருப்பார், யார் தன்னை ஆயுதத்தால் தாக்கி தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகிலும் தண்ணி ஆயுதத்தால் தாக்கியவராகவே காணப்படுவார். (ஸஹீஹுல் புஹாரி. 1365)

இவ்வாறு தற்கொலை என்பது மறுமையில் நிரந்தர நரகத்தையே பெற்றுத்தரக்கூடிய ஒரு பெருபாவம் என்பதை வலியுறுத்தி இன்னும் பல அறிவிப்புக்கள் ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றன. இவற்றின்மூலமாக ஒரு முஸ்லிம் எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் தற்கொலை என்ற படித்தரத்தை நினைக்கவே கூடாது என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாம் தற்கொலைத்தாக்குதல் என்ற செயற்பாட்டினையும் முற்றாகத்தடை செய்கிறது. ஆனால் நமது சமூகமோ இந்த விடயத்தை இஸ்லாமிய சட்டவிதிமுறைகளின் படி பார்ப்பதை விடுத்து வெறுமனே உணர்வுகளுக்கு மாத்திரம் அடிமைப்பட்டு அதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இதை நியாயப்படுத்த முற்படுகிறது.

சமகாலத்தில் நடைபெற்றுவருகின்ற தற்கொலைத்தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமியர்களினால்தான் நடாத்தப்படுகின்ற என்ற குற்றச்சாட்டை நாம் முற்றாக மறுத்தாலும் உலகில் அவ்வப்போது நடைபெறுகின்ற இவ்வாறான தற்கொலைத்தாக்குதல்களுக்கு சில இஸ்லாமிய அமைப்பென்னும் பெயரில் இயங்கிவருகின்ற இயக்கங்கள் உரிமை கோருவதால் அக்குற்றச்சாட்டில் உள்ள சில பகுதிகளை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கமானது இஸ்லாத்தின் எதிரிகளுடன் போரிடும்படி நம்மை பணிக்கிறது. இஸ்லாத்தை அழித்தொழிக்க பாடுபடுகின்ற எதிர்த்தரப்புக்களோடு எமது சக்திக்கு உட்பட வரைக்கும் நாம் போராடி அதில் மரணித்தாலும் நமக்கு மறுமையில் அதிகபட்ச கண்ணியத்தையும் உபசரிப்பையும் அழ்ழாஹ் வழங்குவதாக தனது திருமறையில் வாக்களிக்கிறான்.

எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அழ்ழாஹ்வின் பாதையில் போர்புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி,அவர்களுக்கு நாம் மகத்தான் நற்கூலியை கொடுப்போம். (அல் குர்ஆன். 04:74)
இது அழ்ழாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற முஜாஹிதுகளுடைய சிறப்பினை எடுத்துக்கூறுகின்ற ஒரு அல் குர்ஆனிய வசனமாகும்.

iraq church

ஆனால் இவ்வாறு அழ்ழாஹ்வின் பாதையில் போர் புரிகின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் பல கட்டுப்பாடுகளையும் எச்சரிக்கைளையும் தடையுத்தரவுகளையும் விதிக்கிறது. அவற்றில் மிகவும் பிரதானமானவையாக மதஸ்த்தலங்கள், பாடசாலைகள், நீர்நிலைகள் போன்ற பொதுத்தலங்களையும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள், அங்கவீனர்கள் மற்றும் மதகுருமார்கள் போன்ற யுத்த களத்தில் நம்மை நேருக்கு நேர் எதிர்த்து சண்டையிடாத அப்பாவிகளையும் கொல்வது கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கிறது.

இவர்கள் அல்லாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கு திட்டம் வகுப்பவர்கள், அதன்படி செயற்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களை கொல்லுவதற்கு இஸ்லாம் ஏவல் விடுக்கிறது.

தற்கொலைத்தாக்குதலும் ஜிஹாதும்.
இந்த தற்கொலைத்தாக்குதல்களை நாம் எடுத்துக்கொண்டால் ஒரு எதிரியை துல்லியமாக இலக்கு வைத்துத்தாக்குகின்ற நடைமுறை இதில் கிடையாது. மாறாக ஒரு பொது எதிரியை அழிப்பதற்காக அந்த எதிரியை சூழவுள்ள ஏனைய பொதுமக்கள், பொது மக்களுடைய சொத்துக்கள் போன்றவற்றையும் சேர்த்தே அழித்தொழிக்கின்ற வழமையே தற்கொலைத்தாக்குதல்களின் போது நிகழ்கின்றன. மக்கள் கூட்டமாக கூடுகின்ற இடங்களான சந்தைகள், வணக்கஸ்த்தலங்கள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்தே தற்கொலைக் குண்டுதாரிகள் தங்களுடைய தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர்.

இந்த சந்தர்ப்பங்களில் இலக்கு வைக்கப்படுகின்ற எதிரிகள் கொலப்படுகிறார்களோ இல்லையோ அங்கே பல அப்பாவிப்பொதுமக்கள் அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுவது நிச்சயமாகும். இவ்வாறு ஒரு எதிரிய அழிப்பதற்காக அந்த எதிரியோடு தொடர்பற்ற ஏனைய பொதுமக்களை கொலை செய்வது இஸ்லாத்தில் மிகப்பெரும்பாவம் என்ற அடிப்படையில் இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை.

ஒரு பொது எதிரியை அழிப்பதற்காக சூழவுள்ள நான்கு பொதுமக்களை அழிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்று கூறி இது போன்ற தற்கொலைத்தாக்குதல்களை சிலர் நியாயப்படுத்தினாலும், தெரிந்துகொண்டே அப்பாவி பொதுமக்களை கொலை செய்கின்ற விடயத்தில் இஸ்லாமிய மார்க்கம் மிகவும் இறுக்கமான நடைமுறையினையே கடைப்பிடிக்கிறது.

எனவே இது போன்ற சடவாதக் காரணங்களால் ஒருபோதும் தற்கொலைத்தாக்குதல்களை ஆதரிக்கமுடியாது.

அதேநேரம் பொதுமக்களோ பொதுமக்களுக்குப் பயனளிக்கின்ற சொத்துக்களோ அல்லாத எதிரிகள் மாத்திரம் சூல்கொண்டுள்ள ஓரிடத்தில், எதிரிகளுடைய முகாம்களுக்குள் புகுந்து இந்த தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தமுடியுமா என்று கேட்டால் அதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.
கா

ரணம் நான் முன்னே குறிப்பிட்டது போன்று ஒரு நியாயமான இலக்கை அடைய நினைக்கின்ற நாம் அதற்குப் பிரயோகிக்கின்ற செயற்பாடுகளும் நியாயமானதாக இருக்கவேண்டும்.
வட்டியை மூலதனமாகக் கொண்டு பெறப்பட்ட வருமானத்தின் மூலம் மேற்கொள்கின்ற தான, தர்மங்கள் எவ்வாறு அழ்ழாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாதோ அதேபோன்றுதான் தற்கொலை என்னும் பெரும்பாவத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற ஜிஹாதும் அழ்ழாஹ்விடத்தில் செல்லாக்காசாகிவ்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு முஜாஹிதுடைய முதலாவது நோக்கம் எதிகளை அழிப்பதல்ல. தான் ஒரு எதிரியை அழித்தாலும் தனக்குப் பின்னே பல எதிரிகள் உருவாகத்தான் போகிறார்கள். ஆகவே எப்படியாவது எதிரியை அழித்துவிட்டால் போதும் என்று ஒரு முஜாஹித் போராடக்கூடாது. மாறாக அழ்ழாஹ் வலியுறுத்திய இவ்வறப்போராட்டத்தில் நான் கலந்து கொள்வதன் மூலம் நாளை மறுமையில் நான் ஒரு ஷஹீதுடைய அந்தஸ்த்தை அடையவேண்டும் என்ற நோக்கமும் இறைவனுடைய திருப்தியுமே ஒரு இஸ்லாமியப் போராளிக்கு முதல் நிலையில் இருக்கவேண்டும். அவ்வாறு போராடக்கூடிய ஒரு போராளியால் மாத்திரம்தான் இஸ்லாம் காட்டித்தந்த நேர்வழியில் தனது ஜிஹாதை முன்னெடுக்கமுடியும்.

தற்கொலைத்தாக்குதல்களைப் பொறுத்தவரைக்கும் எதிரியை கொல்வதற்கு முன்னரே தற்கொலைக்குண்டுதாரி பல மாமிசத்துண்டுகளாக உடல் சிதறி மடிந்து போவதை நாம் காண்கிறோம், கேள்வியுறுகிறோம்.

தற்கொலைத்தாக்குதல் ஒவ்வொன்றிலும் எதிரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் தற்கொலைக்குண்டுதாரி ஒரு போதும் உயிர்பிழைப்பதில்லை. தற்கொலைத்தாக்குதலை நடாத்திவிட்டு குண்டுதாரிகள் திரும்பிவந்ததாக சரித்திரமே கிடையாது. இதனால்தான் அவர்கள் மனித வெடிகுண்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தற்கொலைத்தாக்குதல் நடாத்துகின்ற இயக்கங்களில் உலகிலேயே தலை சிறந்த ஒரு இயக்கத்தின் பெயரைக் குறிப்பிடமுடியுமாக இருந்தால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கம் ஒன்று மாத்திரமேயாகும். இன்று அல் குவைதா என்றும் ISIS என்றும் பல சர்வதேச இயக்கங்கள் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தினாலும் விடுதலைப்புலிகள் இயக்கம் நடாத்திய தற்கொலைத்தாக்குதல்களுக்கு முன்னால் இவைகள் அனைத்துமே வெறும் பூஜ்ஜியம்தான். மாத்திரமன்றி விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த தற்கொலைத்தாக்குதலுக்கென்று பலKarumpulikal-I பிரத்தியேகமான கொள்கைகளை தமக்கென்று வகுத்து அதற்கென விசேடமாகப் பயிற்ருவிக்கப்பட்ட கரும்புலிகள் (Black Tigers Force) என்றொரு படைப்பிரிவையே தோற்றுவித்து செயற்பட்டுவந்த ஒரு அமைப்பாகும். இன்று சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற தற்கொலைத்தாக்குதல்கள் அனைத்துமே வெறும் தரைவழித்தாக்குதல்களாக மாத்திரமே அமைந்துள்ளன. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்போ தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி (நீர்வழி) ஆகிய மூவழிகளிலும் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்துகின்ற அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றுக்காணப்பட்டது.

அப்பேர்ப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பே தாம் நடாத்திய எத்தனையோ தற்கொலைத்தாக்குதல் நடவடிக்கைகளில் இலக்குகளை தவறவிட்டு போராளிகளை மாத்திரம் பலிகொடுத்துள்ளது. இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை குறிப்பிடமுடியும்.

இலங்கை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னால் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தற்கொலைத்தாக்குதல் போன்றவற்றை குறிப்பிடமுடியும். இன்னும் இதுபோன்று கடல் வழியாகவும் தரை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் விடுதலைப்புலிகளால் இலக்குவைக்கப்பட்ட அதிகமான நபர்கள் குறியிலிருந்து தப்பித்த சம்பவங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

இது விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரைக்கும் ஒரு சாதாரண விடயம். காரணம் அவர்கள் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கமல்ல.
ஆனால் இதுவே இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பாக இருந்தால் இஸ்லாமிய முஜாஹிதுகள் நடாத்துகின்ற தற்கொலைத்தாக்குதல்களில் இவ்வாறு இலக்குகள் தவறவிடப்பட்டு போராளிகள் மாத்திரம் மரணித்தால் அவர்களுடைய மறுமை வாழ்வின் நிலையென்ன?
இவர்கள் அழ்ழாஹ்வின் பாதையில் மரணித்த ஷஹீதுகளாக கணிக்கப்படுவார்களா, தங்களை தாங்களே அழித்துக்கொண்டவர்களாகக் கணக்கிடப்படுவார்களா?

இவர்கள் தற்கொலை செய்துகொண்டவர்கள். ஒரு போதும் இவர்கள் ஷஹீதுகளாக மரணிக்கமாட்டார்கள். தற்கொலை செய்பவர்களுக்கு அழ்ழாஹ்விடத்தில் எவ்வகையான உபசரிப்பு இருக்கிறதோ அதைத்தான் இவர்களும் பெற்றுக்கொள்வார்கள். (அழ்ழாஹ் நாடினால் மன்னிக்கலாம்) ஆனால் இவர்கள் தற்கொலை செய்து மரணித்தவர்கள் என்ற அடையாளத்தில் எதுவித மாற்றங்களும் கிடையாது.
எதிரியை கொல்வதென்பது இரண்டாவதாக உள்ள விடயம். எதிரியை கொல்வதற்கு முன்னரே தன்னைத்தானே கொலை செய்துகொள்கின்ற இந்தக் கலாச்சாரத்திற்கு இஸ்லாம் எவ்வாறு அங்கீகாரம் வழங்கமுடியும்?

அந்த வரிசையில் தற்கொலைத்தாக்குதல்கள் என்பவை இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருபோதும் கிடையாது. இஸ்லாம் அதை ஊக்குவிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.

அந்த வகையில் தற்போது சர்வதேச உலகில் நடைபெற்றுவருகின்ற தற்கொலைத்தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எள்முனையளவு கூட சம்பந்தம் இல்லையென்பதும்,
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இஸ்லாத்தின் மனிதநேய கோட்பாடுகளையும் உயிர்களின் விடயத்தில் இஸ்லாம் காட்டுகின்ற கரிசனை மற்றும் ஜிஹாத் என்ற சொற்பதத்தின் அடிப்படை அர்த்தத்தினை புரிந்துகொள்ளாத சில சமூக, சமுதாய விரோதிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்டு வருகின்றன என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
எனவே இவ்வாறு தமது மறுமை வாழ்வைப்பற்றி சிந்திக்காமல் அப்பாவிப்பொதுமக்களுடைய உயிர்களைப்பற்றி கரிசனை கொள்ளாமல் தங்களுடைய ஏதோவொரு தேவைப்பாட்டை நிறைவேற்றிக்கொள்ளும் சுயநலன்களுக்காக தற்கொலைத்தாக்குதல்கள் நடாத்துகின்ற தனிநபர்கள் எப்பேர்ப்பட்ட இயக்கங்களின் பெயர்களால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் சரி, தம்மை எவ்வளவு பெரிய முஜாஹிதுகளாக, தியாகிகளாக உலகிற்கு அடையாளம் காண்பித்துக்கொண்டாலும் சரி, இஸ்லாமிய சமூகம் ஒருபோதும் இவைகளை அங்கீகரிக்கவோ அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவோ கூடாது என்பதை மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.

இஸ்லாம் என்பது உலகிலுள்ள அத்தனை மதக் கோட்பாடுகளை விடவும் மனித நேயத்தை உயர்ந்த தொனியில் ஓங்கிஒலிக்கின்ற ஒரேயொரு மார்க்கமாகும். இந்த மார்க்கம் போதிக்கின்ற மனிதநேயக் கோட்பாடுகளை மாற்றுமத மக்கள் மத்தியிலும் எடுத்துக்கூறுவதற்கே நாம் பாடுபடவேண்டுமே தவிர இவ்வாறான மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்து இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டை உடைத்தெறிந்து இஸ்லாத்தின் மீதான தவறான எண்ணத்தை விதைப்பதற்கு ஒருபோதும் முன்னிற்கக்கூடாதென்பதை நினைவில் நிறுத்திக்கொள்வோம்.

Published by

Leave a comment