ஜூலை 6 -14 வரை வேட்புமனு ஏற்பு: தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார், க. பொ.த (உ/த) பரீட்சைக்கு மாற்று ஏற்பாடு

mahinda_desapiriya_200_135[1]நாளை திங்கட்கிழமை முதல் வேட்புமனுக்களை கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக்கொள்ள முடியும்

கொழும்பு: பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் துரிதமாக மேற்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் சுயேச்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இப்போதிருந்தே செலுத்த முடியுமெனவும் நேற்று தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்க மையவே இந்த தேர்தலும் நடத்தப்படுவதால் பிரச்சினை ஏற்படப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம் பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற் கண்டவாறு தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட 64 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றிருப்பதாகவும், சுயேச்சைக் குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினாலும் அவற்றின் சில நடவடிக்கைகள் கட்டுப்பாடு விதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் காலத்தில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு (ஆகஸ்ட் 23) எதுவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என பரீட்சைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் உயர் தரப் பரீட்சை நடைபெறும் ஆகஸ்ட் மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதில் நெருக்கடி இருப்பதால் அந்தத்திகதிகளை வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்து அதற்கான இணக்கத்தை அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் திணைக்களம் அதன் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை என்னால் எதனையும் பகிரங்கமாக வெளியிட முடியாத நிலையிலிருந்தேன்.

தேர்தலுக்குத் தேவையான வேட்பு மனுக்கள் அச்சிடும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை முதல் வேட்புமனுக்களை கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே உள்ளது போன்று சுயேச்சைக் குழுவில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் 2 ஆயிரம் செலுத்தப்படவேண்டும்.

கூட்டணி அமைத்துப் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கூட்டில் உள்வாங்கப்படும் கட்சிகளின் பெயர் விபரங்களை முன் கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். அது எமதுபணிகளை இலகுவாக்க உதவும்.

இத்தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முஹமத், ஊடகப் பேச்சாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவரிடமிருந்து பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தேர்தல் காலத்தில் முறைகேடுகள், குழப்பங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. இது தொடர்பில் பொலிஸார் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். பொலிஸ் மா அதிபருக்கு இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment