தேர்தல் திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் NFGGயின் விஷேட செய்தியாளர் சந்திப்பு

imageஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: நாட்டில் தற்பொழுது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கும் 20வது அரசியல் சாசனத் திருத்தம் எனப்படும் தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை NFGG இன்று (24.06.2015) கொழும்பில் நடாத்தியது.

கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பத்திரிகையாளர் சந்திப்பில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் அதன் தலைமைத்துவசபை உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் வாக்குரிமையைப் பாதிக்கும் தேர்தல் திருத்தத்தினைக் கொண்டுவருவதில் கடைப்பிடிக்கப்படும் முறையற்ற ஒழுங்கு, அதில் காட்டப்படும் அவசரம் என்பனவற்றை ஆட்சேபித்த NFGG பிரதிநிதிகள் சகல சமூகங்களினதும் பங்குபற்றுதலுடன் அவர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் இத்திருத்தமானது நிதானமாகவும், உரிய அவகாசம் எடுத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

image

சிறுபான்மைக் கட்சிகளால் கோரப்படும் இரட்டை வாக்குச் சீட்டு தொடர்பிலும் இதில் ஏற்படக்கூடிய பாதகமான நிலைகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த NFGG பிரதிநிதிகள் இதற்குத் தீர்வாக புதிய வாக்களிப்பு முறை ஒன்றினையும் முன்மொழிந்தனர்.

அத்தோடு நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் இந்த முக்கிய யாப்புத் திருத்தமானது மேற்கொள்ள முடியாது என்றும் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட்டு புதிய மக்கள் ஆணை மூலம் இதனை மேற்கொள்வது பொருத்தம் என்றும் தெரிவித்தனர்.

Published by

Leave a comment