கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – வில்பத்து என்று திசை மாறி விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் – இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவித கருத்தும் கூறாமல் மௌனம் காத்துவருகின்றமை அரசல்புரசலாக நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.
அமைச்சர் ரிசாதை தவிர வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இந்த விடயத்தில் பேசவுமில்லை குரல் கொடுக்கவுமில்லை என்று சமுகத்தின் மத்தியில் நிலவிய குற்றச்சாட்டுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முதற் தடவையாக தனது மௌனத்தை கலைத்த சம்பவம் ஒன்று கடந்த ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.
‘ஹக்கீமுடன் ஒரு சில மணித்தியாலயங்கள்’ எனும் தொணிப்பொருளில் கடந்த ஞாயிறு 21ம் திகதி முகா தலைமையமான தாருஸ்ஸலாமில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
முகா சார்பாக சுமார் 10 முகநூல் முகவர்களும் 03 ஊடகவியாளர்கள் உட்பட கட்சிப் போராளிகள் அடங்கலாக சுமார் 20 பேர் அளவில் பங்கு கொண்ட இந்நிகழ்வை ஹக்கீமின் சகோதரரும் கவிஞருமான ரவூப் ஹஷீர் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த தினம் மாலை 4.45க்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாகியே ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வு தொடர்பில் நேற்று முதல் இன்றுவரை முகநூல்களிலும் செய்தி இணையத்தளங்களிலும் எதிரும் புதிருமான கருத்துக்களும் மறுப்பறிக்கைகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன.
இது குறித்த உண்மைத் தன்iமையை அறியும் நோக்கோடு அந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்த ஊடகவியாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அந்நிகழ்வில் இடம்பெற்றதாக கூறப்படும் உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை அம்பலத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பங்கு பற்றியவர்கள் தொடர்பில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது கருத்துக்களை கூறுமாறு முதலில் பணித்தார்.
அதற்கமைய முகநூல் முகவர்களும் ஊடகவியாளர்களும் கட்சிப்போராளிகளும் தத்தமது கருத்துக்களை ஒவ்வொருவராக கூற முற்பட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஊடகத் துறையில் எவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கருத்தறியும் நோக்கில் கூட்டப்பட்ட இந்நிகழ்வில் மேற்சொன்ன தரப்பினர்; தத்தமது கருத்துக்களை அப்போது முன்வைக்க தொடங்கினர்.
இந்த வேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள்;, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும்; அதன் பின்னர் தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ள வில்பத்து தொடர்பிலும் நீங்கள் எதுவித கருத்தும் கூறாது அந்த விடயத்தில் அந்த மக்களுக்கு எதுவித ஒத்துழைப்பையும் வழங்காது மௌனம் காத்து வருகிறீர்கள். இது ஏன் என முகா தலைவரை நோக்கி கேள்வி எழுப்பினர்?
ஊடகவியலாளர்களிடமிருந்து இவ்வாறான கேள்வி வரும் என்று சற்றும் எதிர்பார்த்திராத ரவூப் ஹக்கீம், பதில் கூறுவதற்கு திணறிப்போனார். பதில் கூற முடியாமல் ஏதோ கூறி இழுத்துக் கொண்டு சென்ற அவர் இறுதியில் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலைக்கு உள்ளானவராக பின்வருமாறு பதிலளித்தார்.
‘ நானும் அந்த விடயத்தில் களமிறங்கினால் சிங்கள சமுகம் முஸ்லிம்களை இன்னும் இனவாதக் கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருக்கும். அதற்காகத்தான் பின்வாங்கினேன் என்று தான் எப்போதும் பேசும் வழமையான கருத்தைக் கூறி சமாளித்த போது ஊடகவியலாளர்கள் மீண்டும் அவரிடம் கேள்வி தொடுக்கத் தொடங்கினர்.
இதன்போது குறுக்கிட்ட முகா சார்பான முகநூல் முகர்கள், முகா சார்பாகவும் ரவூப் ஹக்கீம் சார்பாகவும் ஏதோவெல்லாம் பேசி, ரிசாத் அமைச்சர் உங்களுக்கு ஏதேனும் கொடுக்கின்றாரா என்ற ரீதியில் சற்று ஆவேசப்பட்டவர்களாக வினா தொடுத்தனர்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் ‘ ரிசாத் உண்மையாகவே முஸ்லிம் சமுகத்திற்காகவே பாடுபடுகின்றார். அதனைத் தெளிவாக அறிந்துதான் நாங்கள் அவருக்கு ஒத்துழைத்தோம், அவரது சமுகப் போராட்டத்திற்கும் கைகொடுத்தோம்.
அதற்காக அவர் எங்களுக்கு ஒன்றும் தரவுமில்லை: அதனை பெற்றுக்கொள்ளும் வங்குரோத்து ஊடகவியலாளர்கள் நாங்களுமில்லை என அவ்விரு ஊடகவியலாளர்களும் சூடாக பதிலளித்தனர். அத்துடன், எங்களைப் பொறுத்த வரை ரவூப் ஹக்கீமும் ஒன்றுதான் ரிசாதும் ஒன்றுதான். நாளை முஸ்லிம் சமுகத்திற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குரல் கொடுத்தாலும் அவ்வாறு தான் நாங்களும் இவருக்கு கைகொடுப்போம் என திட்டவட்டமாக கூறினர்.
இதனையடுத்து குறித்த நிகழ்வு திசைமாறி சென்று விடாமல் கவனம் செலுத்திய ரவூப் ஹக்கீம் பின்வருமாறு கூறினார்.
‘எனதும் கட்சியினதும் ஊடகத்துறை மிகவும் பலயீனமடைந்துள்ளது. எமது விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் பெருமளவில் செய்திகள் இடம்பெறுவதில்லை. அதற்கு காரணம் எமது பலவீனமே என்று ஒத்துக்கொண்ட ரவூப் ஹக்கீம், சமுக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களின் தாக்கம் இக்காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
எனவே இது விடயத்தில் எனக்கு அபிப்பிராயங்களை தந்துதவுமாறு கேட்டதுடன் முகாவுக்கும் எனக்கும் எதிராக வரும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் ஆக்கங்களுக்கும் பேஸ்புக்கில் சாதகமான கருத்துக்களை பதிவிடுவதுடன் முகா சார்பாக கட்டுரைகளை வரையவும் வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஊடகவியாளர்கள் ‘ அப்படியென்றால் ஒரு செய்தி இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு ஊழியர்களை நியமித்து உங்கள் சாதமான ஆக்கங்களை பதிவிடுங்கள்.
முஸ்லிம் காங்கிரஸூக்கு சார்பாக தொடர்ச்சியாக நாங்கள் எழுதினால் மக்கள் மத்தியில் பெரும் இழுக்கு எமக்கு ஏற்படும் மட்டுமன்றி எங்களது சுயாதீன தன்மைக்கும் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் கட்சியின் உயர்பீட உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ரவூப் ஹக்கீம் வெளியேறிச் சென்றுவிட்டார்.
இதன் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு தலா 2 ஆயிரம் ரூபா வீதம் அன்பளிப்பு தொகை ஒன்று வழங்கப்பட்டது. எனினும் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் இருவர் பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
இதுதான் தாறுஸ்ஸலாமில் ஞாயிறு மாலை இடம்பெற்ற சம்பவமாகும்.
இது இவ்வாறிருக்க ஊடகவியலாளர்களையோ இணையத்தள பொறுப்பாசிரியர்களையோ வெறுமனே ரூபாய் 2 ஆயிரத்திற்கு மட்டிடும் தைரியத்தை இந்த ரவூப் ஹக்கீமுக்கு கொடுத்தது யார் என்ற கேள்வி இச் சம்பவத்தின் பிற்பாடு இன்று நாடுபூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்து கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதி ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் மிகவும் தாழ்நிலைக்கு கொண்டு செல்லவும் துணிச்சலும் தைரியமும் திறமையும் மிக்க ஊடகவியலாளர்களின் எழுத்துக்களை ரூபாய் 2ஆயிரத்திற்கு விலை பேச இந்த அரசியல் வாதிகள் யார்;?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று இந்த தார்ப்பரியத்தை உணர்ந்து கொண்டுள்ளது போன்று இன்று முதல் ஏனைய அரசியல் வாதிகளும் ஊடகவியலாளர்களை குறைத்து மதிப்பிடும் அகம்பாவத் தோரணையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுவே ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களினதும் மிகவும் ஆவேசமான வேண்டுகோளாக உள்ளது.


Leave a reply to cassim Cancel reply