
கொழும்பு: அதிகாரத்தில் இருந்த காலத்தில் மஹிந்த எவ்வகையான பொய்களை கூறினாரோ அதே பொய்களையே தோல்வியடைந்த பின்னும் மக்களிடம் கூறி மீண்டும் ஆட்சிக்கு வர மஹிந்த முனைவதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி நாட்டு மக்கள் மஹிந்தவின் பொய்களுக்கு முதலாவது பாடத்தைப் புகட்டினர்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இறுதிப் பாடமும் புகட்டப்படுமென ஐ. தே. க பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாஷிம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மீண்டும், மீண்டும் பொய்யைக் கூறி நாட்டில் இனங்களுக்கு இடையில் குரோதம், சந்தேகத்தை பரப்ப முயற்சிப்பது கவலைக்குரியதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது குற்றம் சுமத்தி மஹிந்த பிரபல்யம் பெறப்பார்க்கிறார்.
விகாரைகளில் ஊடகக் கண்காட்சிகளை நடத்தி பிரதமர் பதவியின் தற்கால சுகானுபவத்தை அனுபவிக்கப்பார்க்கிறார். தமது ஊழல், மோசடிகளை மறைக்க புலி மந்திரத்தை ஜெபம் செய்யும மஹிந்த புலிகள் மீண்டும் தலைதூக்கி இருப்பதாகவும் கூறுகிறார்.
நாம் முன்னர் கேட்ட பல வினாக்களுக்கு அவரால் பதில் கொடுக்க முடியாமற் போனது போல் இன்னும் எமது மூன்று முக்கிய கேள்விகளுக்கும் அவரால் பதிலளிக்க முடியாதுள்ளது.
* ஜனாதிபதி மாளிகைகள் கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் பதில் இல்லை.
* வீதி நிர்மாணத்தில் பெறப்பட்ட 55 பில்லியன் கடனில் 28 பில்லியன் எவ்வாறு செலவிடப் பட்டதென காரணத்தை அவரால் கூற இயல வில்லை.
* அவரும் அவரின் குடும்பத்தவரும் பாவித்த அரச வாகனங்கள் தொடர்பான தகவல்களும் இன்னும் மர்ம இரகசியமாகவே உள்ளது இவை மூன்றுமே எமது முக்கிய கேள்விகள். இவரால் இதுவரை இக்கேள்விகளுக்குஏன் பதிலளிக்க முடியாமலுள்ளது.
இவைகளைவிடவும் அலரி மாளிகையில் மஹிந்த வளர்த்த நாய்களுக்கு அரச பணத்தால் உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நாய்களுக்கு வெளி இடங்களில் இருந்து உணவு வழங்க இலட்சக்கணக்கான ரூபா செலவானது.
அவர் அரச நிதியைப் பாவித்தமை மட்டுமல்ல, அவரின் குடும்பத்தவர்கள் செய்த மோசடி, ஊழல்கள், வியாபாரங்கள் தொடர்பாகவும் பல விபரங்கள் வெளிவரவில்லை. அந்த விபரங்கள் விரைவில் வெளிவரும்.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டன.
அதிகார ஆசையை விடவும் தனது ஊழலை மறைக்க வேண்டுமென்ற அச்சமே மஹிந்தவை ஆட்சிக்கு வர தூண்டுவதாகவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
Leave a comment