மட்டக்களப்பு: நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
காந்திபூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை சென்றது. பின்னர், அம்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மகஜரொன்றைக் கையளித்தார்.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சி.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ‘அரசே கொலையாளியை சட்டத்தின் முன் நிறுத்து’, ‘மண்டூர் மதிதயானின் கொலைக்கு பின்னணி யார்’ போன்ற ஆகியவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.
Published by

Leave a comment