மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
மறிச்சுக்கட்டி: மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் வேலைத்திட்டத்தை கண்டித்தும், தமது தாயக பூமியில் இறுதி மூச்சு வரை தாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கோறி 2 இலட்சம் மக்களின் கையொப்பத்தை பெறும் வேட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை இப்பிரதேச மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மறிச்சுக்கட்டி மொஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் ஆரம்பமானது.
இந்த கையொப்பம் பெறும் வேலைத்திட்டத்தை யாழை், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட உலமா சபைகளும், அல்ஜாசிம் ஆராய்ச்சி அமைப்பு, பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, உடனடித்தீர்வுக்கான அமைப்பு என்பன கூட்டாக ஏற்பாடு செய்துள்ளதாக அல்ஜாசிம் அமைப்பின் தலைவர் மௌலவி தௌபீக் இங்கு கூறினார்.
எதிர்வரும் 10 தினங்களுக்குள் நாடு தழுவிய முறையில் இந்த கையொப்பம் பெறப்படவுள்ளதாகவும், இதில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்ற பேதமின்றி வாழ்விடம் பறிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது கையொப்பங்களை இட முடியும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறு பெறப்படும் கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதி நிதிகளிடத்திலும் கையளிக்கப்படும் என்று மற்றுமொரு ஏற்பாட்டாளரான உடனடித் தீர்வுக்கான அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இன்றைய இந்த கையொப்பம் இடும் நிகழ்வில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், சமூர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான், வீ.ஜயதிலக, ஜனுாபர், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இல்யாஸ், எம்.ஈ.எச். மஹ்ரூப், முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், உலமாக்கள், உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இதன் போது சமூகமளித்திருந்ததுடன், தமது கையொப்பங்களையும் இட்டனர்.
Published by

Leave a comment