லாஹூர்: சிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. இரு தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு முன்னணி அணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றன.
பாதுகாப்பு அச்சத்திற்கு மத்தியில் சிம்பாப்வே அணியினர் பாகிஸ்தானுக்கு சென்று போட்டியில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இந்த நிலையில் சிம்பாப்வே அணியின் பாகிஸ்தான் வருகைக்கு பின்னணியில் மிகப் பெரிய பேரம் நடந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கிரிக்கெட் சபையின் நெருங்கிய வட்டாரங்கள் கூறிய தாவது:- கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் செல்லாத நிலையில், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற சாதகமான சூழல் தங்கள் நாட்டில் நிலவுகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
முதலில் சிம்பாப்வே வீரர்களும் தயங்கினர். அதன் பிறகு ஒவ்வொரு வீர ருக்கும் தலா ரூ.6½ லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தரவாதம் அளித்தது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிம்பாப்வே வீரர்களுக்கு உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதற்கான கட்டணம் கூட இன்னும் கிடைக்கவில்லை.
இத்தகைய சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பணம் தருவதாக கூறிய தும் போட்டிக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனாலும் சில வீரர்கள் இந்த தொகை குறைவாக இருக்கிறது என்று ஆட்சேபித்தனர். அதைத் தொடர்ந்து அந்த தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்தத்தில் உள்ள சிம்பாப்வே வீரர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கும் அதிகபட்ச மாதாந்திர சம்பளத்தை விட இது ஒரு மடங்கு அதிகமாகும்.
அத்துடன் சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கும் பெரிய தொகையை தர பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்புக் கொண்டது. அதனால் தான் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது என்று சிம்பாப்வே அரசின் விளையாட்டு ஆணையம் எச்சரித்த போதிலும், அதை உதாசீனப்படுத்தி விட்டு சிம்பாப்வே அணியினர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடினர்.
2-வது ஒரு நாள் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது, அதன் அருகே தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினான். இந்த சம்பவத்திற்கு பிறகும் சிம்பாப்வே வீரர்கள் சமாதானம் அடைந்து கடைசி ஆட்டத்தில் தொடந்து விளையாடியதற்கும் இந்த உத்தரவாதத் தொகை தான் காரணம்.
ரூ.8 லட்சம் பணம் வீரர்களுக்கு இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. சிம்பாப்வே கிரிக்கெட் சபையை கவனித்ததையும் சேர்த்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதற்காக ஒதுக்கிய மொத்த தொகை ரூ.3¼ கோடியாகும். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவித்தன.
Published by

Leave a comment