குடியிருப்புக் காணிகள் வனப் பிரதேசமாக 2012 இல் பிரகடனம்

rishadகொழும்பு: தமக்குரிய காணிகளை ஜி. பி. ஆர். எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி, முள்ளிபுரம் மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு மக்களின் ஒருபெரும் சொத்து அது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்குரிய ஒரு சொத்து.

இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு தெற்கிலுள்ள மக்களை விடவும் மரிச்சுக்கட்டி, பாலக்குழி, முள்ளிகுளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே அதிகமுள்ளது. அவர்கள் தான் இவ்வனத்தை காலா காலமாகப் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனால் சமாதானம் ஏற்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து கொண்டு ஜீ. பி. ஆர். எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவருக்கும் தெரியாத வகையில் 2012ம் ஆண்டில் 6050 ஹெக்டேயர் காணியை மரிச்சுக்கட்டி, கரடிக்குழி வனம் என அமைச்சருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இது சட்டப்படி பிழையான நடவடிக்கை.

பொதுவாக ஒரு பிரதேசத்தை வனப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதாயின் அது தொடர்பாக முதலில் பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலாளருக்கும் அறிவிக்க வேண்டும். அது குறித்து அப்பிரதேச மக்களுக்கு அறிவூட்டவேண்டும். அப்பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அது தொடர்பான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அது குறித்து எவராவது எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் அது குறித்து மக்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும். நீதிமன்றம் செல்வதாயின் அதற்கும் இடமளிக்க§ வண்டும். இவை எதற்கும் இடமளிக்கப் படாது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

1990ல் வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது இங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேறினர். அதனால் அவர்கள் 23 வருடங்கள் தம் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதபடி அகதி முகாம்களில் வாழ்ந்தனர். அதனால் அவர்களது காணிகள் காடாகி காணப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் ஜி. பி. ஆர். எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்த்தால் அது காடாகவே தென்படும். அதற்காக அது வனப்பிரதேசம் என தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் வர்த்தமானி வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயலையும், இது தொடர்பான வர்த்தமானியையும் நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இங்கு வாழும் மக்கள் தயாராகி வருகின்றார்கள். திருட்டு தனமாக வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட்டு விட்டு எமது மீள்குடியேற்றத்தை பிழையாகவும், மோசமான நடவடிக்கையாகவும் சித்தரிப்பதால் நாம் பெரிதும் வேதனை அடைந்துள்ளோம். நாம் காடுகளை ஆக்கிரமிக்கும் சமூகத்தினர் அல்லர். உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Published by

One response to “குடியிருப்புக் காணிகள் வனப் பிரதேசமாக 2012 இல் பிரகடனம்”

  1. ஜி.பி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பார்த்தால், 23 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம், மக்கள் வாழ்ந்து வெளியேறிய பகுதிகள் காடாகத்தான் தெரியும் என்கிறார் அமைச்சர். அது உண்மைதான்.

    காடு என்று பிரகடணப்படுத்திய அந்த வனத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு சில வேளை “தான் வர்த்தமானி அறிவித்தல்விடும் பகுதி முன்னர் காடாக இருக்கவில்லை, முஸ்லிம்கள் குடியிருந்த பிரதேசம்“ என்பது தெரியாமல் இருந்திருக்கலாம்.

    ஆனால், அந்தப் பகுதியை பல ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, அமைச்சராகவும் இருந்து கொண்டிருக்கும் அமைச்சருக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. தெரியாது எனக் கூறவும் முடியாது. காரணம்,
    1. வர்த்தமானி அறிவித்தல் பகிரங்கமாக வெளியிடப்படுவது.
    2. அது அதிகாரபூர்வமான அரசின் பிரகடணம்.
    3. அதன் பிரதிகள் யாருக்கு கிடைக்கின்றதோ இல்லையோ, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இலவசமாக வெளியான அன்றே அனுப்பி வைக்கப்படுகின்றது.
    4. இவற்றை வைத்துப் பராமரிக்க அலுவலக வசதியும், அவற்றை அறிந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிப்பதற்காக, தனியான செயலாளர் உட்பட மற்றும் பல வசதிகளும் அரசினால் செய்து கொடுக்கப்படுகின்றது.

    இந்த வர்த்தமானி அறிவித்தல் 2012 இல் வெளியிடப்பட்டதாகக் கூறும் அமைச்சர், அன்று அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராகவும், அமைச்சரவையிலும், ஜனாதிபதியிடமும் மிகவும் சக்தி வாய்ந்த, செல்வாக்குப் பெற்ற அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்பொழுதெல்லாம் இந்த வர்த்தமானி அறிவித்தலை அறியாதவர், இன்று மட்டும் எப்படி அறிந்தாரோ என்பதுதான் விந்தையானது.

    ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர், தான் அமைச்சராக இருந்த போது, தான் அங்கம் வகித்த அமைச்சரவையில், தனது சக அமைச்சரால் வெளியிட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலை “திருட்டு தனமாக வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட்டு விட்டு“ என்ற தொடரால்வர்ணிக்கின்றார்.

    மேலும், 2012ஆம் ஆண்டு வரை, அப்பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை அவரது அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

    இவ்வமைச்சர், அன்றைய அரசில் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்து இலட்சக் கணக்கில் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்துள்ளதாகப் பல தடவைகளில் கூறியுள்ளார்.

    வன்னி தேர்தல் தொகுதிக்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பிராகவும், மீள்குடியேற்ற அமைச்சராகவும் இருந்த இவ்வமைச்சர், தானும் ஒரு அகதி முகாமில் அகதியாக வாழ்ந்தவர் என்பதை அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றார். அதனால் அவ்வகதி மக்களுக்கு என்ன, எப்படி, எங்கு தேவை போன்றவைகளை யாரையும்விட மிகவும் தெளிவாக
    அறிந்திருப்பார்.

    தான் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், அம்மக்களின் பிரதிநிதியாகவும், முஸ்லிமாகவும், அகதிமுகாமில் வாழ்ந்தவராகவும், மீள்குடியேற்ற அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த அமைச்சராகவும், அலரி மாளிகைக்குள் வைத்து ஒரு ஊடகவியலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கும் அளவிற்கும், தாக்கிவிட்டு வீரப் பிரதாபம் பேசும் அளவிற்கு துணிவும், சக்தியும் உள்ளவராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், அதுவும் தேசியத் தலைவர் எனவும் கூறிக் கொள்பவராகவும், அடிக்கடி அல்லாஹ்வின் பெயரையும், வடக்கு முஸ்லிம்களின் பெயரையும் பாவிப்பராகவும் இருக்கும் அமைச்சர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

    அப்படியானால், அமைச்சரவர்கள், இதுவரை திட்டமிட்ட அடிப்படையில், ஆக்கபூர்வமாக, எவ்வித நன்மையை புலிகளால் அகதிகளாக்கப்பட்டு, அரசியல்வாதிகளால் அரசியற் காய்களாக்கப்பட்டுள்ள வடபுல முஸ்லிம்களுக்குப் பொதுவாகவும், தனது தொகுதியைச் சார்ந்தவர்களுக்கு சிறப்பாகவும் செய்துள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக வெளிப் படுத்துவாரா என அவ்வப்பாவி மக்கள் கேட்கின்றனர்!

Leave a comment