பலவந்தமாக வெளியேறப்பட்ட வடபுல முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும்

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: கடந்த 1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து அவர்களின் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், இனவாதம் பேசும் ஊடகங்களையும் செய்திகளை திரிபுபடுத்தும் ஊடகங்களையும் ,இனவாதத்தை தூண்டும் தரப்பினரையும் தாம் கண்டிப்பதாக கோஷம் எழுப்பினர். ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் பெரிய பதாதையுடன் பேரணியாக வந்த இவர்கள் ஏறாவூர் நகரசபை முன்றலில் நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீமிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதன்போது, ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் உடனிருந்தனர். இவ் ஆர்பாட்ட பேரணியை ஏறாவூர் சமூக சேவைகள் நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்து நடாத்தியது.

முன்னாள் மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ULM. ஜெய்னுதீன் சேர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில். ‘வடக்கில் வாழ்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டு, இப்பொழுது 30 வருடங்களாகின்றது. இருந்தபோதிலும், அவர்கள் இதுவரையிலும் மீள்குடியேற்றப்படவில்லை. அகதி முகாம்களிலேயே இந்த வடபகுதி முஸ்லிம்கள் அல்லற்பட நேர்ந்தது. அகதிகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5,700 குடும்பங்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த, தற்போது காடுகள் அடர்ந்து கிடக்கும் முசலிப் பிரதேசத்தில் அரசாங்க அங்கிகாரத்துடன் தமது சொந்தச் செலவுகளில் மீள்குடியமர முயற்சிக்கின்றபோது இனவாத சக்திகள் அதனைத் தடுத்து வருகின்றன.

அதற்கு துணையாக சில இனவாத ஊடகங்களும் உண்மையை மறைத்து நிலைமையை திரிபுபடுத்தி விடயங்களை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுகின்றன. எனவே, இந்த இனவாத ஊடகங்களின் போக்கை கண்டிப்பதுடன், வெளியேற்றப்பட்ட அனைத்து வடபகுதி முஸ்லிம்களையும் அரசாங்கத்தின் முழு அங்கிகாரத்தோடு சகல அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து உடனடியாக மீள்குடியேற்றம் செய்யுமாறு கோருகின்றோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment