காத்தான்குடி: நீண்ட கால பிரச்சினையாக காணப்பட்ட குப்பைப்பிரச்சினைக்கான பெரும்பாலான தீர்வு இன்று கிடைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் இன்று மீள் சுழற்சி முறையில் திண்மக்கழிவகற்றல் Compose Plant திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பபட்டது. UNOPS நிறுவனத்தின் அதிகாரி எஸ் சிவகுமார் அதிதியாக கலந்துகொண்டார்.
தவிசாளர் தனதுரையில், பிலிசறு மற்றும் UNOPS நிறுவனங்களின் அனுசரணை மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் அமைந்துள்ள இத்திட்டத்தின் ஊடாக உக்குகின்ற குப்பைகள் மீள் சுழற்சிக்குற்படுத்தப்படுவதுடன் அவற்றினை பசளையாக்கி விற்பனை செய்யமுடியும் எனவும் இதன் அடிப்படையில் ஒரு கிலோ 12.00 ரூபாவுக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றதுடன் ஒரு நாளைக்கு 25 கிலோ கிராம்கொண்ட 40 பேக்குகள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் தனவந்தர்களின் முயற்சியில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியினைக்கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment