இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள்

ranil maithiriகொழும்பு: இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு சேவை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய கடந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள் இச்சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழல் மோசடியில் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவு மற்றும் நபர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த சூழ்ச்சித் திட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்புலனாய்வு பிரிவின் ஆய்வுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 100% பாதுகாப்பு பிரச்சினை உள்ளதுடன் அதற்கு அடுத்தபடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 85% பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ராஜபக்ச ஆட்சியின் கீழ் பல வரப்பிரசாதங்கள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் தரகு பணம் பெற்றக்கொண்ட முப்படை அதிகாரிகள் சில நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பழிவாங்கும் திட்டத்தில் ஈடுபடுவதனை ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் காணப்படுவதாக சர்வதேச புலனாய்வு சேவை இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் அறிவித்துள்ளது.

ranil maithiri

தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் ஒரு மணித்தியாலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் தகவல் வழங்கும் அளவிற்கு அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்கு விசுவாசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச புலனாய்வு சேவையின் இந்த கருத்தை ஒரு கற்பனை என நினைத்து இலங்கை பிரபுக்கள் பாதுகாப்பு சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் அவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம் என சர்வதேச புலனாய்வு சேவை எச்சரித்துள்ளது.

கடந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என பல வாரங்களுக்கு முன்னரே அறிவித்தது, குறித்த சர்வதேச புலனாய்வு சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment