காத்தான்குடி: காத்தான்குடியின் தாய் நிறுவனமெனச் சொல்லப்படும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் ஊஊ அவர்களின் நடவடிக்கைகள் குறித்து புதிய காத்தான்குடி 03, தக்வா வீதி இல: C 13/4 எனும் முகவரியைச் சேர்ந்த ஏ.எம். பர்சாத் என்பவர் தனது அதிருப்தியைத் தெரிவித்து சம்மேளன நிர்வாக சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்படி கடிதத்தின் பிரதிகள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் தஃவா அமைப்புக்கள் என்பவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ‘சம்மேளனத் தலைவரின் பக்கச்சார்பான, எதேச்சாதிகாரமான நடவடிக்கைகள்’ எனும் தலைப்பில் வரையப்பட்டுள்ள மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸாலாமு அலைக்கும்.
நமதூரின் தாய் நிறுவனமான சம்மேளனத்தின் நன்மைதிப்பும் மக்கள் அங்கீகாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே இதனை எழுதுகிறேன்.
நமதூரின் பல்வேறு சமூக விவகாரங்களில் தலைமை தாங்கிச் செயற்படும் சம்மேளனக் கட்டமைப்பின் முதுகெலும்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாசபை இருக்கின்றது. மார்க்க விவகாரங்களில் நம் எல்லோரையும் வழிநடாத்துகின்ற, தீர்ப்புச் சொல்லுகின்ற உரிமையும் பொறுப்பும் உலமா சபைக்கே உரியது.
இதனை முழுமையாக மதித்து நடக்கும் வகையிலேயே சமேளனத்தின் நடவடிக்கைகளும் இதுவரை காலமும் இருந்து வந்துள்ளன. உலமா சபையின் மார்க்க ரீதியான வழிகாட்டுதல்களுடனும் அங்கீகரத்துடனும்தான் சம்மேளனம் இயங்குகின்றது என்பதன் காரணமாகவே தாய் நிறுவனம் என்கின்ற அந்தஸ்தும் அங்கீகாரமும் மக்களால் சம்மேளனத்துக்கு வழங்கப்பட்டும் உள்ளது.
இருப்பினும் சம்மேளனத்துக்கு தற்போதைய தலைவராகச் செயற்படும் சுபைர் சி.சி. அவர்களின் பக்கச்சார்பான சொந்த நலன் சார்ந்த நடவடிக்கைகள் சம்மேளனத்தின் நன்மதிப்புக்கும் மக்கள் அங்கீகாரத்துக்கும் பெரும் குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காத்தான்குடி நூதனசாலை விடயத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு மார்க்க ரீதியான தெளிவான நிலைப்பாடுகளை காத்தான்குடி உலமாசபை முன்வைக்க முட்பட்ட தருணங்களில் இவர் பக்கச்சார்பாகவே நடந்துக்கொண்டுள்ளார்என்பது தற்போது தெளிவாக இருக்கின்றது.
குறித்த நூதனசாபையில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பினை காத்தான்குடி உலமாசபை மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் மிகத் தெளிவாக அறிவித்துள்ளன. இதனை கடந்த ஜும்ஆவின் பின்னர் பள்ளிவாயல்களினூடாக பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு உலமாசபையினால் எடுக்கப்பட்ட முயற்சியினை சுபைர ;சி.சி எதேர்ச்சதிகாரமாகத் தடுத்துள்ளார்.
தான் தலைமை தாங்கும் பள்ளிவாயல்களில் மாத்திரமன்றி ஏனைய பள்ளிவாயல்களிலும் குறித்த விடயம் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படுவதனையும் இவர் தடுத்துள்ளார். உலமாசபையின் இந்த அறிவிப்பானது எமது பிரதேசத்தின் தௌஹீத் பள்ளிவாயல்கள் உள்ளிட்ட ஒரு சில பள்ளிவாயல்களில் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூதனசாலை சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 26.02.2015 அன்று உலமாசபை சம்மேளனத்துடன் நடத்திய கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்ப்பின்படி உலமாசபையின் பிரதிநிதிகளைக் குறித்த நூதனசாலைக்கு அழைத்துச் சென்று பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பும் சுபைர் சி.சி. அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இருந்தாலும் இறுதி வரை அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றவேயில்லை. இந்த விடயமும் உலமா சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
தான் கொண்டுள்ள பக்கச்சார்பான அரசியல் நிலைப்பாடு மாத்திரமன்றி இவ்வாறு தனது பெயரும் உலமாசபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த அறிக்கை வாசிக்கப்படுவதனை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் வகிக்கும் சம்மேளனத் தலைவர் பதவிக்கு சற்றும் பொருந்தாத பக்கச்சார்பான எதேர்சதிகாரமான நடவடிக்கையாகும்.
சம்மேளனத்தின் முக்கிய பதவிகளை வகிப்போர்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத வகையில் கடந்த காலங்களிலும்கூட இவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. உதாரணமாக, கடந்த நகர சபைத் தேர்தலின்போது நா.உ. ஹிஸ்புல்லாஹ்வினால் நிறுத்தப்பட்ட அணியின் ஒரு வேட்பாளராக போட்டியிட்ட இவர், தனது வெற்றியினை உறுதிப்படுத்துவதற்காக பல கீழ்த்தரமான நடவடிக்கைளை மேற்கொண்டார். தனக்கு எதிராகப் போட்டியிட்ட அணிக்கு ஆதரவான உலமாக்களின் தஃவா நடவடிகளைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தி மொட்டைப் பிரசுரங்களை அடித்து வீடு வீடாக விநியோகித்தார். அந்த நேரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட அவர் பொலிஸிலும் ஆஜர்படுத்தப்பட்டார். மாத்திரமன்றி தனது அணியினர் மேற்கொண்ட சகலவிதமான மார்க்க விரோத அநாகரிக, அநியாய நடவடிக்கைகள் அத்தனைக்கும் உறுதுணையாக இவர் நின்றார்.
அதுபோலவே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்கூட ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு விரோதமாக மறைமுகமாக இவர் செயற்பட்டார். ஒரு தேர்தலில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது அவரது சொந்த அரசியல் உரிமை என்றாலும்கூட, ஒரு முஸ்லிமைப் பொரறுத்தவகையில் அந்த நிலைப்பாடு மார்க்கத்துக்கு விரோதமாகவோ சமூகத்துக்கு விரோதமாகவோ அமைய முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என நமது சம்மேளம் மக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுபைர் சி.சி. அவர்களோ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த நமது சகோதரர்களின் சொத்துக்களை அழித்து சேதப்படுத்த வேண்டும் என்ற காடைத்தனமான கருத்தினைக் கொண்டவராக இவர் இருந்தார்.
இப்படியான மோசமான பண்பினையும் பக்கச்சார்பான மனோநிலையும் கொண்ட இவர் சம்மேளனத்துக்கு தலைமை தாங்குதல் என்பது நமது தாய் நிறுவனத்துக்கு ஏற்படும் அபகீர்த்தியாகும். மாத்திரமன்றி இவ்வாறானவர்களின் தலைமையில் சம்மேளனம் தொடர்ந்தும் இயங்குமேயானால் அது சம்மேளனத்தின் நன்மைதிப்புக்கும் மக்கள் அங்கீகாரத்துக்கும் பாரிய அபாயமாகவே அமையும்.
சம்மேளன யாப்பின்படி பெரிய பள்ளிவாயல் ஒன்றில் தலைவராகத் தெரிவாகின்றவர்களே சுழற்சி முறையில் சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்படுகின்றார்கள் என்பது எமக்குத் தெரியும். இருந்தாலும் அவ்வாறு தலைவர்களாக உருவாகின்றவர்கள் எவ்வாறான பண்புகளையும் தரத்தையும் தகுதியையும் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய வரையறைகளை ஏற்படுத்தவேண்டியது பற்றியும் சம்மேளனம் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு போனால் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை போன்ற கனவாங்களினால் தலைமை தாங்கப்பட்ட சம்மேளனம் தகுதியும் தரமுமற்றவர்களினால் தலைமை தாங்கப்படுகின்ற அபாயத்தினைத் தவிர்க்க முடியாது.
கடந்த காலங்களில் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை போன்ற கண்ணியமானவர்களினால் நமது சம்மேளனம் வழிநடாத்தப்பட்டபோது உலமாசபைக்கும் சம்மேளனத்துக்கும் இருந்த இணக்கப்பாட்டினையும் மார்க்க விவகாரங்களில் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து மேற்கொண்ட துணிகரமான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் தற்போதைய சம்மேளன நிருவாகிகள் மீட்டிப்பார்ப்பதும் தற்போதைய நிலைமையோடு அதனை ஒப்பிட்டுப் பார்ப்பதும் அவசியமானது எமக் கருதுகிறேன்.
சம்மேளனம் தொடர்ந்தும் நமதூரின் தாய் நிறுவனமாக இயங்க வேண்டும். அதற்கான நன்மதிப்பும் மக்களின் அங்கீகாரமும் பாதுகாப்பப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இந்த விடயங்களை சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
எனவே இவ்விடயம் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை சம்மேளனம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். – இவ்வாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(புவி. எம். றஹ்மதுழ்ழாஹ்)
Published by


Leave a reply to mohmedrislaam Cancel reply