100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான்
 
காத்தான்குடி: நாட்டில் நல்ல அபிவிருத்தியைத் திட்டமிடுவதாக இருந்தால் உடல் உள ஆரோக்கியமும் வளர்ச்சியும் பெற்ற சமூகம் இருத்தல் வேண்டும். அதற்கு ஆரோக்கியமான குழந்தைகளே தேவை என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் மாவட்ட நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் உரையாற்றும் போதே மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
 
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் பிரதம அதிதியாகவும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல். நசீர்தீன் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
 
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய மாதுக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கான 2000 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
 
குழந்தை கருவுற்று 4 மாதங்கள் முதல் பிள்ளை பிறந்து 4 மாதங்கள் வரையில் வழங்கப்படும் வகையில் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் காத்தான்குடியில் 604 தாய்மார்களுக்கு இப் பொதிகள் வழங்கப்படுகின்றன.
 
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்கனவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment