பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு கடந்த 15 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார். இதன் போது காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வறிய மக்களுக்கு நெல் தானம் வழங்கப்பட்டது.
இங்கு ஆசியுரையை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி) வழங்கினார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.சிவராஜா, சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் றவூப் ஏ மஜீட், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் உட்பட அதன் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே நேரம் புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் பௌத்த முறைப்படியான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொலநறுவை சோமாவதி ரஜமகா விகாரையிலும், இந்து முறைப்படியான நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரிலும், கிறிஸ்தவ முறைப்படியான நிகழ்வு மன்னார் மடு தேவாலயத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment