கொழும்பு: மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நஷனலின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது. உலகளவில் ஊழலுக்கு எதிராகவும், அரசுகள் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்பதைக் கோட்பாடாகக் கொண்டும் இயங்கும் டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை அரசு மீது சில விமர்சனங்களை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, நாட்டில் பல மாறுதல்களைக் கொண்டுவரும் நோக்கில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சில திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
அதில் ஊழலை ஒழிப்பது, செலவினங்களைக் குறைப்பது, ஜனநாயக அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவது போன்ற பல அம்சங்களை அடங்கியிருந்தன.
புதிய அரசு வேலைத்திட்டங்களை அறிவித்திருந்தாலும், ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் போதிய முன்னேற்றம் இல்லை என டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நஷனலின் இலங்கைக் கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரச செலவினங்களை குறைப்பது என்பதும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது. அமைச்சரவையில் 25 அமைச்சர்களே இருப்பார்கள் என்று அவர் கூறியதற்கு மாறாக இப்போது பிரதமர் உட்பட 40 பேர் கபினெட் அமைச்சர்களாகவும், மேலும் பலர் இராஜாங்க மற்றும் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
Published by


Leave a comment