அரசியலுக்குள் சிக்கியுள்ள சுன்னாகத்து நீர்? பருகலாமா? இல்லையா? என்பதில் ஒரே குழப்பம்!!

sunnakam wellசுன்னாகம்: கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது.

பின்னர் தனியார் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற் கும் வட மாகாண சபைக்கும் இடையேயான பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்போது இப் பிரச்சினை மத்திய அரசிற்கும், மாகாண அரசிற்கும் இடையே யானதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குறிப்பிட்ட துறையில் கைதேர்ந்த பெரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுக்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் மேற்படி நீரைப் பருகுவதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என வட மாகண சபை மக்களுக்கு அறிவித்திருந்தது. எனினும் ஆபத்து எவுவும் இல்லை, பருகுவதும் பருகாததும் உங்களது பிரச்சினை என்பதாக வட மாகாண சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி மக்களில் பெரும் பகுதியினர் அந்நீரை வழமைபோல் மீண்டும் பாவிக்கத் தொடங்கியிருந்தனர்

இந்நிலையில் அந்த நீரைப் பாவிப்பது மிகவும் ஆபத்தானது, அதில் கழிவு எண்ணெய்யும், கிaஸ¤ம் கலந்துள்ளது, எக்காரணமும் கொண்டும் இந்த நீரைப் பருகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது. சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிaஸ¤ம் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வைத்துக் கேட்டுள்ளார்.

sunnakam well

இதன் காரணமாக தமது சொந்த மண்ணிலிருந்து கிடைக்கும் தமக்குச் சொந்தமான நிரைத் தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடப் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள மக்கள் இரு தரப்பில் எத்தரப்பின் கூற்றை நம்பிச் செயற்படுவது எனும் இக்கட்டானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமது பிரதேசக் கிணறுகளில் எண்ணெய் படிமங்கள் தெரியத் தொடங்கிய காலத்திலிருந்து அப்பகுதி மக்கள் தமது கிணற்று நீரை எவ்விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தாது இருந்து வருகின்றனர். இதன் காரண மாக அப்பகுதி மக்கள் தமது நீர்த் தேவைகளுக்காக மாதம் ஆறாயிரம் ரூபா முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபா வரை செலவிட்டு வருகின்றனர். நீர் வழங்கல் அமைச்சு பவுஸர்களில் தேவையான அளவு நீரை அப்பகுதி களில் வழங்கு வருகின்ற போதிலும் அது மக்களது தேவைகளுக்குப் போது மானதாக இல்லை எனவும் மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நீரைப் பயன்படுத்தலாம் எனும் வட மாகாண சபையின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானதன் பின்னர் மக்கள் அந்நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாது இதர தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர். இப்போது மத்திய அரசாங்க அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் அந்நீரைப் பயன்படுத்துவதை முற்றாக நிறுத்தியுள்ளனர்.

இவ்விடயத்தில் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகளைத் தவிர்த்து தமது அடிப்படைத் தேவையான நீரைப் பெற்றுத்தர அரசியல்வாதி களும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

Published by

Leave a comment