காத்தான்குடி: நமது தேசத்தில் பல அரசியல் ஒழுங்குகள் பற்றிய கருத்தாடல்கள் உள்ளன அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் பற்றிய கருத்தாடல்கள் மிக அதிகமாக முஸ்லிம் சமூகத்துக்குள் பேசப்பட்டுள்ளது. பேசப்பட்டும் வருகிறது. கள அரசியலில் உள்ளவர்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய இயக்கங்கள், அறிவியல் தளத்திலுள்ளோர், சமுக ஆர்வலர்கள் என பலதரப்பாரும் தமது பின்புல சிந்தனாதிக்கத்துக்கும்,வாசிப்புக்கும், அனுபவத்திற்கும், எல்லாவற்றிக்கும் மேலாக தனி மனித நம்பிக்கைகளுக்கும் இயைபாக அரசியல் கருத்துகளை கொண்டிருக்கின்றனர்.
இதில் சிலர் தங்களது சிந்தனைகளை பரப்புரை செய்வதிலும் தங்களது கருத்துக்கள் தொடர்பான பிறரின் அபிப்பிராயங்கள் தொடர்பிலும் அக்கறை காட்டுகின்றனர். இந்த அரசியல் விழிப்புணர்வானது செயற்பாட்டு வடிவம் பெறுமளவிற்கு இந்த அரசியல் கருத்துரைஞர்களால் ஒன்றுபடுத்தப்பட்டு சக்தியுறச் செய்யப்படுவதில்லை அல்லது அந்த சகோதரர்களுக்கு அதற்கான வாய்ப்பும் அவகாசமும் கிடைப்பதுமில்லை. ஏடுகளோடு சுருங்கிவிடும் கருத்தாளர்களின் கருத்தாதிக்கம் அரசியல் கத்துக்குட்டிகளாக உள்ள பலரை இன்னும் குழப்பிவிட்டுள்ளது.
இதன் காரணமாக எந்த ஒருவர் மீதும் அல்லது எந்த அரசியல் சக்திகளின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் மீதான நம்பிக்கையினை சலனப் படுத்தி விடுகிறது. இதனால் சமுக நோக்கற்ற சுநல அரசியல் வாதிகள் தோல்வி பயமற்று தமது தில்லுமுல்லு அரசியலில் வேரூன்றி நிலைத்திருகின்றனர். இஸ்லாமிய அரசியல் அல்லது அரசியல் நடவடிக்கைகளில் இஸ்லாமிய கோட்பாடுகளைப் முன்னிலைப் படுத்திய பிரச்சாரம் என்பது இலங்கை முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் பிரசன்னத்தோடு ஆரம்பித்தது. அந்தக் கட்சி தக்பீர் முழக்கம், உணர்ச்சி யூட்டும் பாடல் முழக்கங்கள் போன்ற விளம்பரங்களோடு மட்டுமல்லாது குர் ஆன் ஹதீஸ் என்பனதான் எமது அரசியல் யாப்பு, உரிமை, போராட்டம் போன்ற உணர்ச்சியூட்டும் கோஷங்களைப் பயன்படுத்தியும் தமது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டது.
இந்த வெற்றியில் அந்தக்கட்சி உதயமாகிய கால கள நிலவரங்களும் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்தக் கட்சியின் உற்பத்திகளான அரசியல் வாதிகள் காலத்திற்கு காலம் கோஷங்களை மாற்றினாலும் தமது அரசியல் சுயலாபத்தை அடைந்து கொள்வதில் மிக கவனமாகவே செயற்பட்டு வெற்றிகண்டு தமது பதவிகளையும் பணபலத்தையும் உறுதிப் படுத்திகொண்டனர். இதற்காக கட்சி தாவுவதற்கும் புதிய கட்சிகளை உருவாக்குவதற்கும்இ முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதற்கும் கூட இவர்கள் தயாராய் இருந்தனர்இ இருக்கின்றனர். தமக்கு கிடைக்கும் பதவி வாய்ப்பினை வைத்துக் கொண்டு மக்களுக்கான அடிப்படை விடையங்களுக்குக் கூட பலமுறை இவர்களிடம் கையேந்த வேண்டியவாறு அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைத்து பழக்கிவிட்டுள்ளனர்.
ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் சாதாரணமாகவே நடைபெரறுகின்ற அபிவிருத்திகள் கூட இந்த அரசியல் வாதிகளின் தலையீட்டினால் முஸ்லிம் சமுகத்திற்கு பூரணமாக கிடைக்க விடாது கனகட்சிதமாக தடுக்கப் படுகிறது. இதற்காக ஊர்வாதம், பிரதேசவாதம், இனவாதம், வன்முறைவாதம் என தேவைக்கு ஏற்றவாறு காலத்திற்கு காலம் ஒவ்வொரு ஆயுதங்களைக் கையிலெடுக்கின்றனர். சமுகத்தின் நிலவும் பெரும் பான்மையான பாமரத் தனம் இந்த ஏமாற்றுக்கு மயங்கி விடுகிறது. இத்தகு எமாற்றுகளைப் புரிந்துகொண்டுள்ள சிறு தொகையினரும் இந்த அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க, எதிர்த்து நின்று செயற்பட தயங்குகின்றனர். எனவே உண்மை மௌனித்து மனதிற்குள் அழும் சிறுபான்மையாக எப்போதும்போல் பார்வையாளாராக ஒதுங்கி நிற்கிறது.
இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் முஸ்லிம்கள் மத்தியில் உண்மையான மக்கள் நலன் சார்ந்த அரசியலைக் கட்டி எளுப்புவது மிகவும் சவாலான செயற் திட்டமாக மாறிப் போயுள்ளது. அதற்காக பாடுபடும் எவரையும் மக்கள் உடனடியாக நம்ப தயாராக இல்லை. இஸ்லாமிய விழுமியங்களோடு கூடிய ஒரு நாகரிக அரசியல் முன்மாதிரியை நிறுவிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது. இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த அரசியல் கலாச்சாரம் முஸ்லிம் சமுகத்திலிருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும் என நம்புகின்ற, ஆசைப் படுகின்ற பலர் தமது இஸ்லாமிய அறிவு இ சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் புரிதல்இ தமது இஸ்லாமிய இயக்கப் பின்னணி மற்றும் இன்னோரன்ன பிற காரணங்களால் முஸ்லிம் அரசியல் மாதிரி (Model) இவ்வாறுதான் அமைய வேண்டும் என வரையறை செய்துகொண்டுள்ளனர். இவர்களது கர்பிதங்களுக்கு சிறிதும் மாறுபட்ட எந்த அரசியல் மாதிரிகளையும் இவர்கள் அங்கீகரிப்பதற்கோ கூட்டாக இயங்குவதற்கோ இவர்கள் தயாராக இல்லை. இதனால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நன்னோக்கத்துடனான அரசியல் செயற்பாட்டாளர்கள் சிதறிக் காணப் படுவதுடன் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளோடு ஒன்றுபட முடியாமல் விலகியே செயற்படுகின்றனர். அல்லது மிக காரசாரமான விமர்சனங்களோடு எதிரணிகளாக மாறிவிடுகின்றனர்.
இது சிறந்த முன்மாதிரியான மாற்று அரசியல் ஒழுங்கை நிறுவிக் கொள்வதில் பெரும் தடையாகவே இருந்துவருகிறது. இந்த தடை ஊர் மட்டத்தில் தொடங்கி தேசிய மட்டம் வரை வியாபித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு சாராரும் தமக்கான கொள்கைவாதத்தொடு ஒவ்வொரு அரசியல் சக்திகளாக மாறி செயற்பட்டு வெற்றி பெறுவதென்பது எந்தவகையிலும் சாத்தியப் படாத ஒரு செயற்திட்டமாகும். ஒவ்வொரு சாராரும் தமக்கென ஒரு கட்சியோ அல்லது அரசியல் இயக்கமோ நிறுவ தலைப்படின் முஸ்லிம் அரசியல் இன்னும் அதிகமாக குழப்பமுற்று சிதைந்து போகும். ஆயினும் எந்தவகையான அரசியல் பின்னணியோ அல்லது புரிதலோ இருந்தாலும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியல் மாதிரிகளை இலங்கை தேசத்துக்குள் அப்படியே பிரதி பலிக்க முடியாது. உதாரணமாக ஒட்டகங்களைப் பற்றியும் பேரீச்சை மரங்களைப் பற்றியும் ஆழமாகப் புரிந்திருந்தாலும் இங்குள்ள மரவள்ளி பற்றியும் பனை மரம் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நமது பிரச்சனைகளின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கான பொருத்தமான தீர்வுகளைத் தேட முடியும். அதாவது வெளிநாடொன்றின் தீர்வானது அது இஸ்லாமிய நாடாக இருந்தாலும் கூட எமது உள்ளக பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாக அமையாது. மாறாக நமக்கான அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட தீர்க்க தரிசனமிக்க தீர்வு ஒழுங்குகள் பற்றிய உள்ளக ஆய்வுகளும் கருத்தாடல்களும் மிக அவசியமாக இருக்கின்றன. இதற்கு சமுகத்தின் சகலதரப்பினரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
எனவேதான் முஸ்லிம் சமுகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வினை ஒவ்வொரு சாராரும் தமது முகாம்களுக்குள் நின்றுகொண்டே அணுகுவதை விடுத்து ஆகக் குறைந்தது விரிவான கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் செய்யவேண்டிய தேவை அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாது, காலாவதியாகிப் போன முஸ்லிம் அரசியல் கலாசாரங்களுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுக்கும் முண்டு கொடுப்பதைத் தவிர்த்து புதிய திசையில் பயணிப்பதற்கான கூட்டு முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டிய தேவைப்பாடும் அதிகம் உணரப்படுகிறது.
Published by

Leave a reply to shiyam Cancel reply