பௌத்த தர்மத்தினூடாக தேச நலனில் அக்கறை செலுத்திய தேரரின் மறைவையிட்டு கவலையடைகிறோம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Rathanapala Mahanayake TheraNFGG ஊடகப்பிரிவு

கொழும்பு: பௌத்த தர்மத்தின் காவலனாக உயர் அந்தஸ்தில் இருந்துகொண்டு நாட்டின் ஐக்கியம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, மீள் இணக்கப்பாடு என்பனவற்றிற்காக பாரிய பங்களிப்புச் செய்த அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் அவர்களின் மறைவையிட்டு நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

பல்லினத் தன்மை கொண்ட நாட்டின் சமயங்களுக்கூடாக பிரிவினையை வளர்க்க பலர் முனைந்தபோதிலும் சமயம், முரண்பாட்டிற்கான ஒரு கருவியல்ல என்பதிலும் சமயங்களுக்கூடாக ஐக்கியம், நல்லுறவு, பரஸ்பர புரிந்துணர்வு என்பன வளர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஒருவரே மறைந்த தேரராவார்.

நாடு பல்வேறு அரசியல் கொந்தளிப்பான நிலைமைகளைச் சந்தித்த போதெல்லாம் தனது பதவிநிலைக்கூடாக அவர்களுக்கு ஆலோசனை கூறுவதுடன், கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களின்போது கண்டிப்பதிலும் பொறுப்புணர்வோடு செயற்பட்ட ஒருவராகவே தேரர் அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நோக்குகின்றது. அந்தவகையில் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் இணக்கப்பாடான சகல சமூகங்களதும் உரிமைகளை மதிக்கக்கூடியதான அரசியல் கலாசாரம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு ஆன்மீகத் தலைமைகள் மட்டத்தில் இருந்துகொண்டு அழுத்தமிக்க சக்தியாக செயற்பட வேண்டிய தேரரின் இழப்பையிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆழ்ந்த கவலையடைகின்றது என அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் மறைவையிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment