கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று (06.04.2015) மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் MM. அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத், அதன் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் நளீமி, பிரச்சார செயலாளர் சிறாஜ் மஷ்ஹூர் மற்றும் Dr. ILM. றிபாஸ், ஹனான், முஜீப், ரஷீத் உள்ளிட்ட NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், இதில் NFGG கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை மேற்படி விடயங்கள் நல்லாட்சிப் பண்புகள் கொண்டதாக அமையும் விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியதுடன் அதற்காக தமது பங்களிப்புக்களை வழங்குவதற்கும் தாம் ஆயத்தமாக உள்ளதாகவும் உறுதியளித்தனர்.
அத்துடன் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் தலைமையில் அமையப்பெறவுள்ள ஜனாதிபதி செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது பேசப்பட்டதுடன் அதன் முன்னெடுப்புக்களுக்கு NFGG தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள் குடிப்பிட்டனர்.
இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள், இது குறித்து தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகவும் இவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
Published by



Leave a reply to mohmedrislaam Cancel reply