ட்ரிவாந்திரம்: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் பணிபுரியும் இந்திய தாதியர்கள் கடன் தொல்லையால் நாடு திரும்ப மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் 4 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் 349 பேர் முதல்கட்டமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
யெமனில் உள்ள மருத்துவமனைகளில் கேரளாவைச் சேர்ந்த தாதிகள் ஏராளமானோர் வேலை பார்க்கிறார்கள். அதில் பலர் ஆபத்து என்று தெரிந்தும் யெமனில் தங்கியிருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். காரணம் ஊர் திரும்பினால் கடனை அடைக்க முடியாது என்பது தான். பலரும் கல்விக் கடன் வாங்கி தாதிப் படிப்புக்கு படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்ய ஏஜெண்டுகளுக்கு வேறு அதிக பணம் அளித்துள்ளனர்.
கல்விக் கடன், ஏஜெண்டுகளுக்கு பணம் அளிக்க வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடும் என்பதால் யெமனில் உள்ள பல இந்திய தாதிகள் நாடு திரும்ப மறுக்கிறார்கள். கேரளாவில் தாதிகளுக்கு பணியில் சேர்ந்தவுடன் ரூ.5 ஆயிரம் சம்பளம் அளிக்கப்படுகிறது. அனுபவத்தின் அடிப்படையில் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்படுகிறது. அந்த சம்பளம் போதவில்லை என்பதால் பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment